Thursday 7 December 2023

சால் பெல்லோவின் ஹெர்சாக் -1

சால் பெல்லோவின் ஹெர்ஸாக் நாவல் –சில எண்ணங்கள் செந்தூரம் ஜெகதீஷ் மனப்பிறழ்வுக்கும் உலகின் மிகவும் உயர்ந்த இலக்கியத்துக்கும் ஓர் ஆழமான தொடர்பு உள்ளது. எந்த ஒரு மகத்தான கலைஞனும் முழு மன ஆரோக்கியம் உள்ளவனாக இருப்பதை காண முடிவதில்லை.. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிகாசோவின் ஓவியங்களில் கைகால் உறுப்புகளை இழந்த மனிதர்களே பதிவானார்கள் என்பார் பிரபஞ்சன். சக மனிதர்கள் நண்பர்கள் காதலித்த பெண்கள் மணவாழ்க்கை முறிவுகள் சமூகத்தினர் போன்றவற்றால் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசின் இரும்புச் சட்டம் தண்டிக்கப்படுவதற்கான அச்சம் திவாலாவதற்கான கவலைகள் கடன்கள் பாலியல் ஏக்கங்கள், ஒழுக்கவாதிகளின் புகார்கள் என்று பலவகைப் பிரச்சினைகளால் மகத்தான கலைஞர்கள் அலைக்கழிக்கப்படும் போது அவர்களின் நுண்ணுணர்வில் இருந்து தான் படைப்பாற்றல் கிளர்ந்து எழுகிறது. சாமான்ய மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக திருப்தி கொள்கிறார்கள். கலைஞர்களுக்கு அந்த திருப்தி எளிதில் கிடைப்பதில்லை. உரிய வயதில் திருமணம் ஆறேழு ஆண்டுகள் தீவிர காமம் பிள்ளைச் செல்வங்கள் பின்னர் சுற்றுலா ருசியான உணவு சேமிப்பு தொலைக்காட்சிகள் முன்பு முதுமை கழிதல் என்று பலரின் வாழ்க்கை எந்தவித சுவாரஸ்யமும் திகிலும் இல்லாமல் முடிந்து விடுகிறது. பெயர் பெற்று வாழ்ந்தவர்கள் பலரும் பெயர் நீங்கி பிணமென்று பேரிடப்பட்டு சுடுகாடு சென்று தீயில் கரைந்து காணாமல் போகிறார்கள். கலைஞன் ஒவ்வொரு கணமும் வாழ்கிறான். ஒவ்வொரு கணமும் இறக்கிறான். அவன் வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையில்தான் அவன் படைப்பாக்கம். பார்க்க நார்மலாகத்தான் இருக்கிறான். சிரிக்கிறான் ,குழந்தைகளுடன் விளையாடுகிறான், பெண்களை நேசிக்கிறான் மதிக்கிறான் பணிக்குப் போகிறான் வருகிறான் குடும்பத்தோடு இணக்கமாக இருக்கிறான். ஆனால் அவன் மனதுக்குள் ஒரு பேரலை பொங்கிப் பொங்கித் தணிகிறது. இவர் ஏன் இப்படிஇருக்கிறார் என்று சிலரைக் கேள்வி கேட்க வைக்கிறது. எப்போதும் உள்மனம் துயரத்தில தவிக்கிறது. தத்தளிக்கிறது. நிறைய ரகசியங்கள் ரணங்கள் உள்ளே கிடக்கின்றன. அவை எழுத்தாக மாறிவிட்டால் அதன் வலி குறையும் என்று அவன் நம்புகிறான். எழுத்து ஒன்றே நோயாகவும் மருந்தாகவும் உள்ள மனிதனுக்கு நீங்கள் எநத் லௌகீக மயக்கங்களாலும் வீழ்த்தி விட முடியாது. அப்படி மனைவி பிள்ளைகள் சொந்த வீடு வாசல் உற்றார் உறவினர் நண்பர்கள் பயணம் என்றுஇயல்பாக வாழ்கின்ற எந்த ஒரு சராசரியும் மாபெரும் கலைஞனாக மாற முடியாது.அத்தனையும் இருந்தாலும் இல்லாத ஒன்றுக்கான தேடல்தான் அவனை கலையின் பக்கம் திருப்பும். தன் வாழ்க்கையின் வெறுமையைப் பார்க்கத் திராணியற்றவன்தான் இந்தக் கூட்டத்திற்கிடையில் போய் ஒளிந்துக் கொள்கிறான். சால் பெல்லோ எழுதிய ஹெர்ஸாக் நாவலின் நாயகனும் மனப்பிறழ்வு கொண்டவன். அல்லது அப்படி குற்றம் சாட்டப்பட்டு மனநல விடுதியில் சிகிச்சை பெறுபவன். அவன் முதல் திருமண வாழ்க்கை தோல்வி. இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிகிறது. இன்னொருவனை காதலித்து அந்த இரண்டாவது மனைவி இவனை விட்டுப் பிரிகிறாள்., அவள் துரோகத்தால் அவன் மனம் பேதலிக்கிறது. துரோகம் செய்பவர்கள் துன்பம் விளைவிப்பவர்கள் ஆரோக்கியமானவர்களாகக் கருதப்படும் சமூகம் அல்லவா இது. பாதிக்கப்பட்டவர்கள் தானே மனப்பிறழ்வு கொண்டு அலைகிறார்கள். தனது பத்து வயது மகள் மீது உயிரையே வைத்திருக்கும் ஹெர்சாக், குழந்தையைத் தன்னிடம் தரும்படி தாயிடம் கேட்டு தோல்வியடைகிறான். அவன் மனப்பிறழ்வு கொண்டவன் என்று தாய் கூறி சட்டத்தின் துணையால் அவனை மனநலவிடுதிக்கு அனுப்பி விடுகிறாளா். தனது மகளை சரியாக பராமரிக்க மாட்டாள் என்ற கோபத்தால் இரண்டாவது மனைவியைக் கொலை செய்யத்திட்டமிடுகிறான் ஹெர்ஸாக்.ஒரு கைத்துப்பாக்கியில் இரண்டே இரண்டு தோட்டாக்கள் போட்டு, தனது இரண்டாவது மனைவி அவள் காதலன் ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்று மகளை தூக்கிக் கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதுதான் அவன் திட்டம். ஆனால் அந்தப்பெண் மகளை அன்போடு குளிப்பாட்டி உணவூட்டி உபசரிக்கும் காட்சியைக் கண்டு குழப்பம் அடைகிறான். அவன் மனநோய் குணம் அடைகிறது.அதுவரை அவன் பலருக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தான். அந்தோன் செக்காவின் வான்கா போல அந்தக் கடிதங்களை அவன் தபாலில் சேர்க்கவில்லை. வான்காவைப் போல அவனும் ஒரு ஆறுவயது சிறுவனின் மனநிலையில் தான் இருந்தான் ,முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவிக்கு மகளுக்கு ரமோனா என்ற தன் தோழிக்கு என்று அவன் பலருக்கும் அவன் தன் மனத்தைத் திறந்துபோட்டு கடிதங்கள் எழுதியிருக்கிறான். ஒரு கடிதமும் தபாலில் சேர்க்கப்படவில்லை .அது அவன் மனப்பிறழ்வுக்கான ஒரு சிகிச்சை ஒருதெராபி போலத்தான். மகள் நல்லபடியாக இருப்பதைக் கண்டு கொலை செய்யும் எண்ணத்தைக் கைவிடும் ஹெர்ஸாக் கடிதங்கள் எழுதுவதையும் நிறுத்தி விடுகிறான். இனி அதற்கு அவசியமில்லை. இந்த நாவலில் ஹெர்ஸாக்கின் வாழ்க்கை ஒருபாரபட்சமான பார்வையி்ல் அவனுடைய பார்வையில் மட்டுமே சொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது ஒரு கலைஞனின் பார்வை . என் பெயர் ஹெர்ஸாக். நான் தான் அந்தப் பெயரில் வாழும் மனிதன். என்னைத் தவிர வேறு யாரும் அப்படிஇருக்க முடியாது என்று ஹெர்ஸாக் கூறுகிறான். இந்த வரிகளுக்காகவே இந்த நாவலை பைத்தியம் போல நேசித்திருக்கிறேன். இன்னும் வரும்

Wednesday 31 May 2023

தீப் பூக்களுடன் தலையாட்டும் மரம் கவிதை

தினம் ஒரு கவிதை 1 தீப் பூக்களுடன் தலையாட்டும் மரம் மரநிழல் தெரியாத தகிப்புகளூடாக நமது கரங்கள் கோர்த்தன. அங்கொரு மரம் தீப்பூக்களுடன் தலையாட்டுவதைக் கண்டேன். அதனடியில் போய் குளிருக்கு கனப்பு மூட்டிய இளமையைக் காய்த்தோம். பூத்தால் இப்படி பூக்க வேண்டும் சிவப்பு சிவப்பாக என்றது என் இடதுசாரி மனம் மணமே இல்லாமலா என்று சிரித்தாய் காலங்கள் கரைந்தாலும் இந்த மரத்தின் தீப் பூக்கள் உதிரவே இல்லை. நீ பிரிந்து சென்று விட்டாய் .அதன் பிறகுதான் அந்த மரம் சாய்ந்தது அந்த மரம் இப்போது என் நெஞ்சுக்குள் பூத்திருக்கிறது அக்னி கங்குகளுடன் சுட்ட வடுக்களுடன் அதற்கு மேலும் மேலும் நீரூற்றிக் கொண்டிருக்கிறேன் இதில் பறவைகள் அமர்வதில்லை பூச்சிகள் ரீங்கரிக்கவில்லை வெம்மையின் புண்களுடன் ஒரு பழைய நினைவைக் கோர்த்து வைக்கிறேன். எப்போதும் நெருப்புடன் வாழ்கிறேன். எப்போதும் தீயாகவே காய்கிறேன். நீ இருப்பாய் எங்கேயோ ஏதேனும் ஓர் மர நிழலில் வாசனைமிக்க மலர்களோடு. எப்போதாவது தீப்பூக்கள் நிரம்பிய மரத்தைப் பார்த்தாலாவது என்னை நினைத்துக் கொள்வாய். என்னை எரித்துச்சென்ற தீயையும் நீயல்லவா மூட்டினாய். எரிகிறேன். மெழுகுக்குத் தெரியும் எரிவது எத்தனை இன்பம் என்று.

Wednesday 15 March 2023

கணவன் அமைவதெல்லாம் 1-5 செந்தூரம் ஜெகதீஷ்

( முன் எச்சரிக்கை. இதயம் பலவீனமானவர்கள் இத் தொடரைப் படிக்க வேண்டாம். பல அதிர்ச்சி கரமான திடீர் திருப்பங்கள் உள்ளன. ) 1 ##மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கவியரசர் பாடியது உண்மைதான். எனக்கு என் மனைவி அமைந்தது தான் இன்று வரை நான் நலமாக வாழ காரணமாக உள்ளது. என் உறவுக்கார பெண் என்னை விட மூன்று வயது மூத்தவள்.19 வயதில் அவள் மீது தீராத காதல் கொண்டு விட்டேன். அவளுக்கும் அப்போது மிகவும் ஒல்லியாக இருந்த என்னைப் பிடித்திருந்தது. அவளும் ஒல்லி தான். இருவரும் காதலித்து வந்தோம். என் வீட்டில் எதிர்ப்பு இல்லை. நல்ல பெண் .ஆனால் நான் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிந்தால் திருமணம் பேசலாம் என்று கூறினார்கள் என் பெற்றோர். அவள் தந்தைக்கும் சித்தப்பாவுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.வெட்டி விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.கட்டாயப்படுத்தி இனி அவள் உன் சகோதரி என்று கையில் ராக்கி கட்ட வைத்தனர். அவளுக்கு தமிழ் தெரியாது.நான் அவளுக்கு கடிதம் எழுதவே இந்தி கற்றுக் கொண்டேன். ஆனால் சகோதரி என்று பிரித்து விட்டதால் இரண்டு ஆண்டுகள் தொடர்பே இல்லை. கடிதங்கள் வரவில்லை. தபாலில் ராக்கி மட்டும் வந்தது. தனது அண்ணன் திருமணத்திற்கு அவள் கோவையில் இருந்து சென்னை வந்து இருந்தாள்.ஆனால் அவளை சந்திக்கவும் பேசவும் விடவில்லை. அப்போது நான் வேலை பார்த்த ஜவுளிக் கடையில் இலங்கைத் தமிழர் ஒருவர் இருந்தார்.வயதானவர்.மக்கா (மகனே )என்று அழைப்பார்.அவரிடம் எனது காதல் கதையை சொல்லி அழுவேன்.சாக வேண்டும் என்று கூற நிறைய புத்தி சொல்லி பார்த்து வேறு வழியின்றி அவர் எனக்காக தூக்க மாத்திரைகளை வாங்கி வந்து தந்தார். மனம் நோக 50 தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டேன். அவள் அண்ணன் திருமணம் நடந்த மண்டபம் வாசலில் போய் மயங்கி விழுந்தேன். ஆட்டோவில் அள்ளிப் போய் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூன்று நாளுக்கு பிறகு சுயநினைவு திரும்பியது.அவளைப் பார்க்க துடித்தேன். இரண்டு நிமிடங்கள் பார்க்க அனுமதி கிடைத்தது.நலமா என்று விசாரித்து ஓரிரு வார்த்தை பேசினேன். நான் உன்னை சகோதரியாக ( அக்கா) நினைக்க முடியாது என்று அழுதபடி கூறினேன். அழைத்துப் போய் விட்டார்கள். அதுவரைக்கும் கோவிலுக்குப் போகாமல் நாத்திகனாகவே இருந்தேன். கடவுளை நம்பு நல்லது நடக்கும் என்று அம்மா சொன்னதைக் கேட்டு காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் குளத்தில் நீராடி தரிசனம் செய்து வந்தேன். பிறகு ஒருமுறை திருச்சி போன போது நண்பன் ஒருவன் கரூர் அழைத்துப் போனான்.அமரவாதி ஆற்றில் நீராடும் போது கதறி அழுதேன். என் நண்பன் சொன்னான் எல்லா சம்பிரதாய தடைகளையும் உடைத்துப் போடு.நீ அவளை சகோதரியாக நினைக்காத போது உலகமே எதிராக நின்றாலும் கவலப்பட வேண்டாம். இப்போதே கோயம்புத்தூர் போய் அவளைப் பார்த்து பேசு என்று கூறி தன்னிடம் இருந்த அறுபது ரூபாயைக் கொடுத்தான்.கோவைக்கு அப்போது கரூரில் இருந்து 12 ரூபாய் தான் டிக்கெட். கோவையில் இருந்து சென்னை ரயிலுக்கு 28 ரூபாய். வேறு காசு இல்லை. துணிந்து கோயமுத்தூர் பஸ் ஏறி விட்டேன் 2 கோயமுத்தூருக்கு நான் கையில் 60 ரூபாயுடன் கரூரில் இருந்து பஸ் ஏறியது இரண்டாவது முறையாக அந்த ஊருக்கு நான் செல்லும் பயணம். முதல் முறை எங்கள் காதல் எங்கள் இருவருக்கும் மட்டும் தெரிந்து இருவரின் வீட்டுக்குத் தெரியாத போது நான் என் அப்பாவின் பகுதி நேர ஊதியமான 70 ரூபாயை திருடிக் கொண்டு வீட்டில் சொல்லாமல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறினேன். இரவில் கோவையில் இறங்கி ஆட்டோ பிடித்து அவள் வீட்டில் இறங்கினேன். அவள் வீட்டார் ஆச்சரியம் அடைந்து என் வீட்டுக்கு போன் போட்டு விசாரித்த போது, வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து விட்டதாகவும் கோவையை சுற்றிப் பார்க்க ஆசை என்றும் கூறி சமாளித்து விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் அவள் வீட்டிலேயே தங்கியிருந்து மனம் விட்டு பேசவும் பழகவும் முடிந்தது. அவள் தம்பியை அழைத்துக் கொண்டு தப்புத் தாளங்கள் சினிமா பார்க்க போகவும் அவள் தந்தை அனுமதி கொடுத்திருந்தார். நாங்கள் சேர்ந்து பார்த்த முதல் படம் அதுதான். அதன் பிறகு பிரியா விடை பெற்று ஊர் திரும்பி வீட்டில் எல்லோரிடமும் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்ட போததுான் அவளைக் காதலிப்பதாகக் கூறினேன். இதெல்லாம் நடந்து விட்டபிறகு ராக்கி கட்ட வைக்கப்பட்டதும் தூக்கமாத்திரை சாப்பிட்டதும் பற்றி போன அத்தியாயத்தில் எழுதி இருந்தேன் அல்லவா....இந்த முறை அவள் வீட்டுக்குப் போக முடியாது .ஒரே நாளில் சென்னைக்குத் திரும்ப வேண்டும். கையில் பணம் இருக்காது .உணவுக்கே காசில்லை. அவள் வெளியே தண்ணீர் பிடிக்க வரும் வரை ஆறேழு மணி நேரமாக காந்திபுரத்தில் உள்ள அவள்வீட்டை சுற்றிச் சுற்றி வந்தேன். டீ சாப்பிட்டு சாப்பிட்டு பசியாற்றிக் கொண்டு இருந்தேன். அந்த இடம் போலீஸ் காலனி வேறு.யாராவது சந்தேகக் கேசில் பிடித்து விடக்கூடும் என்ற பயம்வேறு. ஒருவழியாக மாலையில் அவளை சந்திக்க முடிந்தது. கையில் குடத்துடன் வந்து சில நிமிடங்கள் பேசினாள். நான் மறக்காமல் அவளை சந்திக்க வந்ததில் அவளுக்கும் மகிழ்ச்சி .அவள் இரவில் மீண்டும் வந்து வேலிக்கு அருகில் நின்று மூன்று சப்பாத்திகளைக் கொடுத்துச் சென்றாள். சக்கரையுடன் அதனை சாப்பிட்டு ரயில் பிடித்து சென்னைக்குத் திரும்பினேன். காலையில் இருநது கிடைத்த உணவு அதுமட்டுமாதான். அதன் பிறகு அடிக்கடி கடிதங்கள் மூலமாக காதலை வளர்த்து வந்தோம். மூன்று நான்கு ஆண்டுகளாக சந்திக்கும் வாய்ப்பே அமையவில்லை.அவள் ஆறுமாதகாலம் உறவினர்கள் வீட்டுக்கு புனே போய் விட்டாள். புனே போகுமளவுக்கு என்னிடம் காசு இல்லை. தொடர்ந்து காதலிப்பதா மறந்து விடுவதா என்று தெரியாமல் காலம் இழுத்துக் கொண்டிருந்தது. மறக்கவும் முடியவில்லை. அப்போது சிறிது காலம் எனக்கு வேறு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது .அவள் ஒரு தமிழ்ப் பெண். பாவாடை தாவணி கட்டியிருப்பாள் அவளுக்கு நான் காதல் கடிதங்கள் எழுதித் தர வாங்கி பாவாடையில் ஒளித்துக் கொள்வாள். அவளும் ஓரிரு வரிகளில் நலம் விசாரித்து பதில்கள் எழுதுவாள். ஒரு முறை படிக்கட்டில் ஏறிச் சென்றுக் கொண்டிருந்த அவளை வழி மறித்து இடுப்பில் கை வைத்து இழுத்து அவள் பிளாஸ்டிக் வளையல்களை அணிந்த கையைப் பிடித்தேன். மறுக்காமல் சிரித்தாள். முத்தமிட முயன்ற போது விடுபட்டு வெட்கத்தில் ஓடி விட்டாள். ஆனால் அந்தக் காதலு்ம் நிலைக்கவில்லை. அவளுக்கு விரைவில் திருமண ஏற்பாடு ஆகி விட்டது. காதலை அவளுக்கு சொல்லாமலும் சொல்லியும் சொல்லாமலும் சொல்லியும் பயனில்லாமலும் அழுதுக் கொண்டே அவள் திருமணத்துக்குச் சென்று விருந்து சாப்பிட்டு விட்டு வந்தேன். இன்று வரை அவளை மீண்டும் சந்திக்கவில்லை. அதன் பிறகு இலக்கியக் கூட்டங்கள், கவியரங்கங்கள் என்று போகும்போது ஆறேழு பெண்கள் அழகாகக் கண்ணில் பட்டனர். ஆனால் யாரையும் காதலிக்கத் தோன்றவில்லை. மனம் முழுவதும் கோயமுத்தூரில்தான் இருந்தது. மீண்டும் ஒருமுறை என் காதலின் முடிவை அறிந்து கொள்ள கோவைக்குப் போய் வர முடிவு செய்தேன். 3 கோயமுத்தூருக்கு அடுத்து ஒருமுறை அல்ல நான்கு முறை போய் வந்தேன். ஒருமுறை அவளைப் பார்க்கவே முடியவில்லை. மற்ற மூன்று முறை திருடனைப் போல் ஒளிந்து ஒளிந்து பார்க்க முடிந்ததே தவிர பேச முடியவில்லை. அவள் அண்ணி அம்மா, தம்பி அண்ணன் என யாராவது அருகில் இருந்தனர். அவள் என்னைப் பார்க்கவில்லை. நான் வந்திருப்பதே அவளுக்குத் தெரியாது .இருவருக்கும் இடையே கடிதப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் அவளை புனேவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவள் உறவுமுறை பையன் ஒருவனுடன் திருமணப் பேச்சு நடப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் எனது உறவினர்கள் இருவரிடம் அவள் நெருங்கிப் பழகுவதாகவும் வதந்தியைப் பரப்பி விட்டு என்னை நம்ப வைத்தனர். நான் நம்பிக்கை இழக்கலானேன். அப்போது என் வீட்டிலும் எனக்குப் பெண் தேட ஆரம்பித்தார்கள். வெளிநாட்டில் இருந்து தம்பி திரும்பி வந்தான். அவன் திருமணம் செய்து குடும்பத்துடன் இந்தியாவில் தொழில் நடத்தி வாழ நினைத்தான். அதற்கு மூத்த மகனான என் திருமணம் தடையாக இருந்தது. எனக்கு முதலில் திருமணம் நடத்தினால்தான் அவனுக்குப் பெண் கிடைக்கும் என்பதால் என்னை எப்படியாவது திருமணம் செய்து வைக்க எனது குடும்பத்தினர் முயன்றனர். எனக்கும் அப்போது வயது 25 ஆகி விட்டது. வீட்டின் நிர்ப்பந்தத்தின் பேரில் இரண்டு முறை பெண் பார்த்தேன். அதில் கண்ணாடி போட்ட ஒரு பெண்ணை எனக்கும் பிடித்திருந்தது. இரண்டு முறையும் அந்தப் பெண்களின் வீட்டாரால் நான் நிராகரிக்கப்பட்டேன். காரணம் எனது சம்பளம் அப்போது 400 ரூபாய் மட்டுமே. சொந்த வீடு இல்லை. படிப்பு அதிகம் இல்லை. அழகாக இல்லை இப்படி நிறைய காரணங்களை அவர்கள் கூறினர். என் தம்பி யோசித்தான் பேசாமல் அண்ணன் விரும்புகிற பெண்ணையே திருமணம் முடித்து விட்டால் என்ன என்று யோசித்து எனக்காக பெண் கேட்டு அவன் கோவைக்குப் போனான். ஆடம்பரமான உடைகள், தங்கச்சங்கிலி, டிப்டாப் தோற்றம் கவரும் பேச்சு என்று தம்பி ஜெயித்துவிட்டான். அவள் தந்தை எனக்கு மகளைக் கட்டிக் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழு வருடங்களில் அவர்களும் எங்கெங்கோ மாப்பிள்ளைத் தேடி வரதட்சணை தர முடியாமல் மேலும் மேலும் வறுமையில் தள்ளப்பட்டதால் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர். திருமண ஏற்பாடுகளை நடத்தினர். அப்போது அம்மா அப்பா தம்பியோடு நான் மிகவும் அவமானகரமாக நடத்தப்பட்டேன். தம்பியின் செல்வாக்குவீட்டில் மேலோங்கியது. ஒரு புறம் ஏழு ஆண்டுகளாக காதலித்து அந்தக் காதல் நிறைய பிரச்சினைகளால் கிட்டதட்ட மரணப்படுக்கையில் கிடந்தது. மறுபுறம் பணம் தான் வாழ்க்கையில் பிரதானம் என்ற புதிய சவால் எனது தம்பி மூலமாக எனது குடும்பத்தில் மேலோங்கியது. நான் குறுக்கே இல்லை என்றால் எனக்குரிய பெண்ணை என் தம்பிக்கு மணம் முடிக்கவும் இருவீட்டாரும் திட்டமிட்டனர். ஆனால் இறைவன் அன்றே எழுதி வைத்தானே.....அவள் எனக்கு மனைவி என்றுமுடிவாகி விட்டது. தம்பிக்கு எளிதாக வேறு பெண் கிடைத்து விட்டாள். எனது திருமணத்துக்கு தம்பி பத்தாயிரம் ரூபாய் கொடுத்தான். அதில் துணி மணி எடுக்க நான் அப்பா வேலை செய்த ஜவுளிக்கடைக்குப் போனேன். முதல் முறையாக அப்பாவிடமிருந்து அன்பு பொழிந்தது. எந்த விலையானாலும் பரவாயில்லை நல்லதாக எடுத்துக்கோ என்று பாசத்தைக் கொட்டினார். எனக்கு தந்தையை ஏமாற்றி அவர் சம்பளப்பணத்தை எடுத்து என் காதலியைக் காண ஓடிப்போன நாள் நினைவுக்கு வந்து அழுதேன். பல நாட்களாக இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று தோன்றியது. என் கையில் பணம் இல்லை. நிறைய சம்பளம் இல்லை. தம்பியின் தயவில் திருமணம் செய்ய வேண்டும். வீட்டில் அவன் பக்கம்பேச்சு இருந்தது. ஒப்பிடல் இருந்தது. நான் மெல்ல மெல்ல எனது கவனத்தை இலக்கியத்தின் பக்கம் திருப்பியிருந்தேன். என் வீட்டில் எப்போதும் நண்பர்கள் சூழ்ந்தனர். ஆண்களுடன் நான்கைந்து பெண் கவிகளும் அடிக்கடி வீட்டுக்கு வந்தனர். பிற்காலத்தில் புலவர் புலமைப்பித்தன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி செயலாளராகப் பணி புரிந்த தமிழ் ஆசிரியர் புலவர் சங்கரலிங்கம் தலைமையில் நாங்கள் செந்தூரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதம் ஒரு கவியரங்கம் நூல் வெளியீடு இலக்கிய கருத்தரங்கம் நடத்திக் கொண்டு இருந்தோம். அப்போது சாரு நிவேதிதா விமலாதித்த மாமல்லன், குட்டி ரேவதி எல்லாம் வாசகர்களாக பார்வையாளர்களாக அமர்ந்திருப்பார்கள். அடிதடி எல்லாம் நடக்கும். திருமணத்தில் ஆர்வம் இழந்த நிலையில் எனக்குத் திருமணம் உறுதியானது. ஏழு வருடங்களாக ஆசைப்பட்டவளையே மணக்கக்கூடிய மகிழ்ச்சியும் கனவுகளும் எனக்கு இல்லை. கண்ணீரும் ஏமாற்றமும் கோபமும்தான் மிஞ்சியிருந்தது. நாளை திருமணம் என்ற நிலையில் திருமணம் வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு மீண்டும் ஒரு முறை நான் வீட்டை விட்டு ஓடிப் போனேன். அன்று பலத்த மழை பொழிந்துக் கொண்டிருந்தது.எங்கே போவேன் என்று தெரியவில்லை. ஏன் நான் திருமணத்தை விரும்பவில்லைஎன்று தெரியவில்லை. ஒரு பெண்ணோடு வாழ முடியுமா கையில் பணம் இல்லாமல் என்ற பயம் ஆட்டிப்படைத்தது. அந்தப் பெண்ணை என் உறவினர்களோடு புனே மாப்பிள்ளையோடு என் தம்பியோடுஇணைத்து பேசப்பட்டதும் ராக்கி கட்டியதும் மனரீதியாக பாதித்து இருந்தது. மன நிலைப் பிறழ்ந்தவனைப் போல் ஆகிப்போனேன். திருமணம் செய்த பிறகும் அவளை அவள் விரும்பும் நபரோடு அனுப்பி விடவேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் யாரையும் விரும்பவில்லை (இன்று வரை) அவளுக்கு ஒரேயொரு காதலன்தான் அது நான்தான் என்று மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது. அன்று பலத்த மழை பெய்த நாளில் இரவு நேரத்தில் வீட்டை விட்டு ஓடிப்போனேன். இரவு காட்சி இந்தி சினிமாவுக்குப் போனேன் .அசோக் என்றொரு தியேட்டர் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது. அந்தத் திரையரங்கில் பிளாக் மெயில் என்றொரு படம் ரிலீசாகியிருந்தது. தர்மேந்திரா ராக்கி நடித்தது. அதில் கிஷோர் குமார் பாடிய பல்பல் தில்கே சாத் பாடல் மிகவும் பிரபலம் .ஒவ்வொருகணமும் நீ என் இதயத்துடிப்பில் இருக்கிறாய் என்று கூறும் பாடல் .படத்தில் ராக்கியின் பெயரும் எனது நாளைய மனைவியின் பெயரும் ஒன்று. இரண்டுபட்ட மனநிலையுடன் படம் பார்த்து கொட்டும்மழையில் நனைந்தபடி நடந்து சென்று சென்ட்ரல் அருகில் பெரியமேட்டில் உள்ளஒரு டீக்கடையில் ஒதுங்கினேன். இரவு மூன்று மணிக்கு டீக்கடையை அடைத்த போது போக்கிடமற்றவனானேன். வேறு வழியின்றி மெல்ல நடந்து வீட்டுக்குத் திரும்பினேன். விடிந்தால் திருமணம். விடிந்தது. 4 விடிந்தால் கல்யாணம். விடிந்தது. கு.ப.ராஜகோபாலனின் விடியுமா என்ற கதையில் உயிருக்குப் போராடும் கணவரோடு பயணிக்கும் மனைவி விடிந்ததும் பயணத்தின் முடிவில் கணவரின் இறப்பு செய்தியைக் கேட்பது போலத் தான் எனக்கும் அன்றைய தினம் விடிந்தது. இறந்தது நான்தான். இது எனது கதை. காதல் கதை, குடும்பக் கதை சொந்த மனைவியைப் பற்றிய கதை. இதில் எவ்வளவு சொல்வது எதைச் சொல்வது எதை மறைப்பது எதை சொல்லக்கூடாது என்று என்னால் யோசிக்க முடியவில்லை. மனதில் பட்டதை எழுதுகிறேன். முடிந்தவரை யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்றுதான் யோசிக்கிறேன். ஆனால் சில கசப்பான உண்மைகளை எழுதும்போது சிலரை அது காயப்படுத்தினால் நான் என்ன செய்ய...முதலில் காயம் பட்டவன் நான்தானே. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஒருமுறை தான் என்று சமுதாயம் நிர்ணயித்துவிட்டது. அதனால்தான் திருமணங்கள் ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன. மேள தாளம் ஆடல் பாடல் நகை துணிமணி விருந்து உறவினர்கள் நட்புகள் சூழ என்று அத்தனை மகிழ்ச்சியான தருணங்களும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சி எதையுமே எனது திருமணத்தில் நான் அடையவில்லை ,அதுவும் ஏழு ஆண்டுகளாகக் காதலித்து மணக்கப் போகும் பெண்ணுடன். காலையில் 11 மணிக்குத் திருமணம் .மதியம் வரை சடங்குகள். அய்யர் அக்னி வளர்த்து மாலை மாற்றச் செய்து மங்கல் சூத்திரம் ( தாலி ) கட்டவைத்து ஏழு சுற்று சுற்ற வைத்து இவளை நான் வாழ்நாள் முழுவதும் கண்கலங்காமல் பாதுகாப்பேன் என்று சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டார். மதியம் பசி நேரம் திருமணச் சடங்குகள் முடிந்தன. ஒருவாய் சாப்பிட்டோம். தூங்கி விட்டோம். மாலையில் செம்மையாக மழை கொட்டியது. மழை என்றால் பேய் மழை .யாரும் திருமணத்துக்கு வரமாட்டார்கள் போல இருந்தது. என் நெருங்கிய நண்பர்கள் சூர்யராஜன், நந்தா, சுதா ,நரசிம்மமூர்த்தி உள்பட பலர் வந்துவிட்டனர். வண்ணை வளவன் எஸ்.அறிவுமணி வந்தார்களா என்று நினைவில் இல்லை. கோட்டு சூட்டுடன் நான் மாப்பிள்ளையாகக் காட்சியளி்த்தேன். என் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஏதோ ஒரு துன்பம் ஆட்டிப் படைத்தது. என்னை நம்பி வந்து விட்ட ஒருத்தியை கடைசி மூச்சு வரை காக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். அதற்கேற்ப அவள் தோழி ஒருவர் அண்ணா இது ரொம்பவும் கஷ்டத்தைப் பார்த்து வந்த பொண்ணு .கண் கலங்க வச்சுராதீங்க அண்ணா என்று கோவைத் தமிழில் கண்ணீர் மல்க கைகூப்பி வேண்டிக் கொண்ட போது எனக்கு அழுகை வந்தது. இல்லைம்மா என் உயிருக்கு உயிராக நேசிப்பேன் .பாதுகாப்பேன் என்று சத்தியம் செய்தேன். திருமண வரவேற்பு முடியவும் மழை நிற்கவும் நள்ளிரவு ஆகி விட்டது. தனி அறையில் விடப்பட்டோம். அதுவரை ஒரு பெண்ணைக் கூட நான் தொட்டது இல்லை. ஒரேயொரு முறை வேறு ஒரு பெண்ணின் இடுப்பைத் தொட்டு கையைப் பிடித்து இருப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இவளை நான் இதுவரை தொட்டது இல்லை என்று அச்சம் பரவியது. படபடப்பு அதிகரித்தது.திருமண மேடையில் கையைப் பிடிக்கும் போதும் எனக்கு மகிழ்ச்சியை விட படபடப்பு அதிகமாக இருந்தது. அன்று இரவு எனக்கு திடீரென காய்ச்சல் பிடித்தது. ஆறேழு நாட்கள் காய்ச்சல் .அவள் படுக்கையில் அமர்ந்து கண்ணீர் விட்டதைக் கண்டேன். பணிவிடைகள் நிறைய செய்தாள். தூக்கம் மயக்கம் என்று ஏழு நாட்கள் கழிந்த பிறகுதான் கணவன் மனைவியாக ஆனோம். திருமணமான புதிதில் முதன் முதலாக அவளை ஒரு சினிமாவுக்கு அழைத்துப் போனேன். சுபாஷ் காய் இயக்கி ஜாக்கி ஷெராப், மீனாட்சி சேஷாத்திரி அறிமுகமாகி நடித்த ஹீரோ என்ற படம் தான் அது. அப்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்த புவனேசுவரி திரையரங்கில் அந்தப் படம் ரீலீசாகியிருந்தது. படம் காதல் கதை பிரிவுக்குப் பிறகு மீண்டும் காதலர்கள் ஒன்று சேர்வார்கள். இனிய பாடல்கள் நிறைந்த படம். ஆனால் நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம். படம் பார்க்கவில்லை. அதன் பிறகு நான் ஆறேழு முறை அந்தப் படத்தைப் பார்த்து விட்டேன். நாங்கள் பேசினோம் என்பதும் சரியல்லை. நான்தான் அதிகமாகப் பேசினேன். என் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றும் எனது கவிதைகள் இலக்கியம் நண்பர்கள் லட்சியம் மார்க்சீய ஈடுபாடு, கடவுள் மறுப்பு பணத்துக்கு எதிரான என் மனநிலை, செல்வந்தர் ஆவது அடுத்தவரின் சுரண்டல் மூலம்தான் என்ற கம்யூனிசக் கருத்தியல் ஆகியவற்றை எல்லாம் ஒரே நாளில் அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையை ஆட்டிக் கொண்டே துணை இருப்பேன் என்று மட்டும் கூறினாள். ஒரு புறம் என் தம்பி பணம் சம்பாதிக்கலானான். நான் இருக்கிற வேலையை எல்லாம் விட்டு விட்டு இலக்கியக் கூட்டங்களுக்கும் சினிமாக்களுக்கும் போகலானேன். தம்பிக்குத் திருமணம் நடந்தது. அவன் மனைவியை மகாராணி போலவும் என் மனைவியை வேலைக்காரி போலவும் நடத்தினார்கள். யாரும் அவளை பாவம் ஓர் ஏழைப்பெண் என்று நினைக்கவில்லை. மாறாக அவள் உழைக்கவே அழைத்து வரப்பட்டவள் போல அவள் மீது சமையல் முதல் துணி துவைப்பது வரைக்கும் எல்லா சுமைகளையும் திணித்தனர். அந்தக் கோபத்தை அவள் என் மீது கக்க ஆரம்பித்தாள் . ஆறு ஆண்டுகள் வரை சகித்துக் கொண்டிருந்தவள் அப்படி இனி சகிக்க முடியாத சூழலை என் குடும்பத்தினர் ஏற்படுத்தி விட்டிருந்தனர். அதே நேரத்தில் அவள் குடும்பத்தினரும் பெரும் பிரச்சினைகளில் சிக்கியிருந்தனர். நான்கு அண்ணன் தம்பிகள் இடையே ஒரே பெண். தந்தை சம்பாதித்து அழித்து விட்டார். இரண்டு அண்ணன்கள் குடி சூதாட்டம் என்று எல்லா கெட்டப் பழக்கங்களுக்கும் அடிமையாகி விட்டனர். இரண்டு தம்பிகள் படிக்க வழி இல்லை. அவள் அம்மா அப்பா பிரிந்து விட்டனர். கிடங்குத்தெருவில் என் மாமனார் ஒரு கதாபாத்திரமாக வருவார். என் மாமியார் இளம் வயதில் தன் பிறந்த வீடான புனேவிற்கு சென்ற போது பைத்தியம் பிடித்து விட்டது.அந்த சமயத்தில் கருத்தரித்துப் பிறந்தவள் என் மனைவி. ஆதலால் அந்த பாதிப்பு அவளுக்கும் மூளையில் இருப்பதை மிகவும் தாமதமாகவே நான் புரிந்துக் கொள்ளத் தொடங்கியிருந்தேன்.மிக அதிகமான கோபம் கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாள். எடுத்ததெற்கெல்லாம் எரிந்து விழுவாள். சுட்டெரிப்பாள். நான் சமாதானம் செய்து விடுவேன். ஆனால் அதற்குள் விதி பலமாக விளையாடி விட்டது. எங்கள் இருவருக்கும் இடையே தினமும் எப்போதும் சண்டை மூண்டது.வாக்குவாதம் வசைகள் அதிகரித்தது. ஒரு முரண்பட்ட கலவையாக அவள் ஒரு புதிய தோற்றம் கொண்டு என் முன் நின்றாள். அவளைத் தண்டிக்க முடியாத போது பல சந்தர்ப்பங்களில் நான் என்னையே தண்டிக்கத் தொடங்கிவிட்டேன். 5 எனது மாமியாருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டதனால் அந்த பாதிப்பு அவர் குடும்பம் முழுவதிலும் இருந்தது. இப்படி எழுதுவதனால் எனது மனைவியை நான் மனநோயாளி என்று கூறுவதாக அர்த்தம் அல்ல, மனநல பாதிப்பு வேறு மனநோய் வேறு.மனநோயாளி என்று என்னை வேண்டுமானால் சொல்லலாம். அவளை சொல்ல முடியாது அத்தனை நல்ல குடும்ப நிர்வாகி. நிதி நிர்வாகம் வீட்டு பராமரிப்பு சுத்தம் பக்தி உழைப்பு அன்பு பாசம் அபாரமான சமையல் கலை எல்லாம் நிறைந்த ஒரு பெண்ணைத்தான் இறைவன் எனக்கு தந்திருக்கிறான். இப்படி மனைவி அமைவதெல்லாம் வரம் தான். ராஜேஷ் கன்னா ஸ்மிதா பட்டீல் நடித்த Aakhir Kyon படத்தில் ஒரு பாடல் வரும்...என் மனைவிக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் .ஏன் படியுங்கள் புரியும். .கணவன் வேறு ஒரு பெண்ணுக்காக தன்னை விட்டுச் சென்றதை நினைத்து துரோகத்தின் வலியால் கதாநாயகி பாடுகிறாள். (லதா மங்கேஷ்கரும் அமித்குமாரும் பாடிய பாடல் இசை ராஜேஷ் ரோசன். பாடலாசிரியர் இன்டிவர்) எதிரிகள் கூட செய்யத் துணியாத ஒரு காரியத்தை என் நண்பன் செய்து விட்டான். உயிர் உள்ள வரை மறக்க முடியாத ஒரு துன்பத்தை பரிசாகத் தந்து விட்டான்.... சுயநினைவை இழக்கச் செய்து கொடுமைகளை திணித்தவன்தான் என்னை பைத்தியம் என்று கூறும் பழியை சுமத்தினான் என்று அவள் பாடுவாள். அவளுக்கு ஆறுதல் கூறும் வகையில் ராஜேஷ் கன்னாவும் பாடுவார்... சொந்த பந்தங்கள்தாம் எப்போதும் துன்பத்தைத் தருவார்கள். அந்தத் துன்பத்தை சில நல்ல அந்நியர்கள் வந்து தாங்கிக் கொள்வார்கள்..... இந்தப் பாடலில் ஸ்மிதா பட்டீல் பாடும் Diwaanagi kaa Diwaanagi kaa phir Hame ilzaam diyaa hain என்ற வரியை கேட்கும் போது என் மனைவி மீது பைத்தியம் மனநலம் பிறழ்ந்தவர் என்றெல்லாம் பழி சுமத்துவது எவ்வளவு பெரிய தப்பு என்று புரியும். அவள் மிகவும் புத்திசாலி. எனக்குக்கூட அவள் அறிவு கிடையாது.பைத்தியம் இங்கு நான்தான். இப்படித்தான் என்னை நான் தண்டித்துக் கொள்ள ஆரம்பித்தேன். எப்போதும் இறந்துவிடவே நினைத்தேன். தற்கொலைக்கான மனநிலையில் இருந்தேன். உடுமலை மஞ்சுளாதேவி ஒரு நல்ல மன நல மருத்துவரைப் பாருங்கள் என்று மருதமலை கோவில் வாசலில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது கூறினார். அப்போது தான் நான் கோவிலுக்குப்போக ஆரம்பித்திருந்தேன். ஆனால் வேகமாக நண்பர்களை குறிப்பாக தோழிகளை இழந்துவிட்டேன். எப்போதும் சாவு பற்றியே சிந்திக்கிற பேசுகிற ஒருவனை யார்தான் சகி்ததுக்கொள்ளமுடியும்? மஞ்சுளாதேவி போன்ற கொள்கையும் ஒழுக்கமும் நிறைந்த நட்புகள் நீடித்திருந்தால் என் வாழ்க்கை சரியான தடத்தில் போயிருக்கும். என் ஆறுதலுக்காகவும் தாம்பத்திய வாழ்வி்ன் போதாமைகளுக்காகவும் நான் வேறு சில பெண்களுடன் நட்பாகப் பழக ஆரம்பித்தேன். ஓரிரு பெண்கள் என்னைக் காதலிப்பதாகவும் கூறினார்கள் . அவர்களும் சில மாதங்கள் பழகியதும் விலகிப் போனார்கள். நீங்கள் ரொம்ப நல்லவராக இருக்கீங்க... ரொம்ப நல்லா பேசுறீங்க... நல்லா அன்பு செலுத்துகிறீங்க நல்லா பழகுறீங்க பின்னர் ஏன் யாரும் உங்களை விரும்பாமல் விலகிப் போறாங்க என்று கேட்ட ஒருத்தியும் உங்களை வாழ்நாள் முழுக்க சிரிக்க வைப்பதுதான் என் லட்சியம் என்று பேசிய ஒருத்தியும் கூட இரண்டு மற்றும் இரண்டு மாதங்களில் எந்தவிதக் காரணமும் கூறாமல் விலகிப்போனார்கள். அது என் ராசி அப்படி என்று எண்ணிக் கொண்டேன்.அதன் பிறகு பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணை க் கூட என் வாழ்க்கையில் நான் அனுமதிக்கவில்லை.இரண்டு மாதங்கள் பழகி விலகிப் போன, என்னை சிரிக்க வைப்பதாக சத்தியம் செய்த ஒருத்தியின் நினைவில் நான் என் மனைவியோடு விலகியும் விலகாமலும் உடனிருந்தும் வாழ்ந்து வந்தேன். அந்தப் பெண் தான் பிறகு கிடங்குத் தெரு துளசியானாள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு கோவை ஞானி ஒருமுறை பேசும்போது என் மனைவியைப் பற்றி அவள் குணாதிசயங்கள் பற்றி அவளுக்கும் எனக்குமான பிரச்சினைகள் பற்றி எல்லாம் மனம் விட்டு ப் பேசினேன். அப்போது ஞானி ஒரு அற்புதமான விஷயத்தை சொன்னைார். அய்யா நீங்க உங்கள் பார்வையிலே அவளைப்பார்க்கறீங்க... உங்கள் பிரச்சினைகள் உங்கள் எண்ணங்கள் உங்கள் துன்பங்களைக் கூறுகிறீர்கள் . உங்கள் கவிதைகள் முழுவதும் அது காணக்கிடக்கிறது. ( இன்னும் மி்ச்சமிருப்பவை தொகுப்புக்கு ஞானி அவர்கள் முன்னுரை அளித்தார் ) எல்லாக் கவிதைகளும் உங்கள் துன்பத்தைப் பேசும் விதமாக உள்ளன. எப்போதாவது உங்கள் மனைவியின் பார்வையில் உங்களைப் பார்த்து இருக்கிறீர்களா...?.அவள் எண்ணம் என்ன என்று கவிதையாக எழுதி இருக்கீங்களா...? அப்படி ஒரு கவிதை இல்லை என்றால் இந்தத் தொகுப்பை நிறைவாக எண்ண முடியாது .ஒரு கவிதை அப்படி எழுதி சேர்த்து வெளியிடுங்கள் என்று கூறினார் ஞானி. நெருப்பு போல ஒரு உண்மையை சுட்டெரிக்கும் விதமாக சொல்லி விட்டார் ஞானி. சார்லி சாப்ளின் நினைவுக்கு வந்தார். நம் காலை ஒருவர் மிதித்து விட்டால் அவர் தான் ஸாரி சொல்லனும்.அப்படித்தான் நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர் சொல்லும் முன்பு ஸாரி என்று நாம் கூறுவதே மேன்மை என்பார் சாப்ளின். நீங்கள் தெரிந்து என் காலை மிதிக்கவில்லை. தெரியாமல் மிதித்து விட்டீர்கள் .உங்கள் காலால் மிதிபடும் இடத்தில் நான் என் காலை வைத்து இருக்கக் கூடாது . அது என் தவறுதான். என் காலை நீங்கள் மிதிக்கும் விதமாக இருந்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்பது போல பேரன்பு கொண்டு பேசும் சாப்ளின் போல வாழக் கற்றுக் கொண்டேன். தவறுகள் என் மனைவியுடையதாக இருந்த போதும் தண்டனையை நான் வாங்கிக் கொண்டேன். ஞானி கூறியது போல அவள் பார்வையில் அவள் உணர்வுகளுடன் ஒரு கவிதை எழுதினேன். என் முதல் நூலான இன்னும் மிச்சமிருப்பவை (1999 )தொகுப்பில் இடம் பெற்ற அந்தக் கவிதை.........

Tuesday 3 January 2023

புத்தகக் காட்சிகளில் எனது அனுபவங்கள் செந்தூரம் ஜெகதீஷ்

ஒரு புத்தகத்தை வாங்கி அதைப் படிக்காமல் வைத்திருந்தால் அந்த எழுத்தாளரை கொல்வதற்கு சமம் என்று எங்கோ படித்திருக்கிறேன். எனக்கு இப்படி கொலை செய்யும் சந்தர்ப்பங்கள் அதிகமாக வாய்க்கின்றன. வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை வாசிக்கும் புத்தகங்களை விட பல மடங்கு அதிகம் என்பதால் இப்படி நேர்கிறது. வருடம் தோறும் புத்தகக் காட்சிகளில் புதிய புதிய புத்தகங்கள் வாங்கி வருவதும் அதில் கால்வசி படிக்கும் முன்பே ஓராண்டு ஓடி விடுவதும் தான் நிகழ்கிறது. இன்னும் புத்தகங்கள் வாங்க வேண்டுமா என்ற கேள்வியும் பணத் தட்டுப்பாடும் எழும் போது தான் சற்று வேகம் குறைகிறது. ஆனாலும் புத்தகக் காட்சிகளுக்கு செல்வதை ஓராண்டும் தவறவிட்டதில்லை. புத்தகக் காட்சி நடைபெறும் நாட்களில் கூடுதலான உற்சாகம் கவ்விக் கொள்கிறது. இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் காட்சியாம்….என்ன சர்வதேசமோ தெரியவில்லை. வெளிநாட்டு தமிழர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா…குறிப்பாக ஈழ எழுத்தாளர்கள்… கழிவறை பார்க்கிங் உணவகங்கள் போன்றவற்றை மேம்படுத்தாமல் ஏசி செல்போன் சிக்னல் வசதி ஏற்படுத்தாமல் அது எப்படி உலகத்தரமான புத்தகக் காட்சி ஆகும் என்றும் புரியவில்லை. நானும் 30 ஆண்டுகளாக எழுதி வந்தாலும் எனது புத்தகங்களுக்கு புத்தகக் காட்சியில் இடம் கிடையாது. எங்கு தேடினாலும் கிடைக்காது. விருட்சம் போன்ற நண்பர்கள் அரங்கில் எப்போதாவது ஒன்றிரண்டு புத்தகங்களை கொடுத்து இருப்பேன். மற்ற அரங்குகளில் புத்தகங்கள் கொடுத்தாலும அதை டிஸ்பிளேவில் கண்ணுக்குத் தெரியும் படி வைக்க மாட்டார்கள். விற்றால் பணமும் தரமாட்டார்கள். கலக்கல் ட்ரீம்ஸ் தமிழ் வெளி வாசகசாலை போன்ற அரங்குகள் இப்போது என்னைப் போன்ற நட்சத்திர அடையாளம் இல்லாத எழுத்தாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக உள்ளன. கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் எனது எட்டு நூல்கள் பல அரங்குகளில் கிடைத்தன. புத்தகக் காட்சியும் நண்பர்களும். கடந்த ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாள் எனக்கு ஓய்வற்ற நாளாக அமைந்தது. சனிக்கிழமை இரவு ஷிப்ட் முடித்து கண் அசராத அயர்ச்சியுடன் குளித்து காலை 10.30 மணிக்கு சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சூர்யராஜனை பிடித்து விட்டேன். எப்படியோ நிமோஷினியை தவற விட்டு விட்டோம். மெட்ரோ சுரங்க பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காதது முக்கிய காரணம். எப்படியோ அவரும் வந்து சேர்ந்து விட்டார். வழியில் வண்ணை வளவனும் இணைந்தார். புத்தகக் காட்சிக்கு வெளியே இருந்த பழைய புத்தகக் கடைகளில வேட்டையாடினோம். உரத்தநாடு சங்கரலிங்கம் என்று மறைந்த எனது பழைய நண்பரின் மரபுக் கவிதை தொகுப்பை வளவன் எடுத்துக் கொடுத்தார். உரத்தநாடு சங்கரலிங்கம் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற தமிழாசிரியராவார். சங்கரலிங்கம் மறைந்த பின்னர் அவருடைய மகன் திரு. பூங்குன்றனும் பின்னர் அம்மையாருக்கு உதவியாளராக பணியாற்றியவர். யார் யாருடன் எல்லாம் பழகி இருக்கிறேன் என்று எண்ணினால் பெரும் வியப்பு . புத்தகக் காட்சியில் எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் பெயர் தெரிகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகத்தில் தனது வாசகர்களுக்கு கையெழுத்திட்டு செல்பி எடுப்பதில் பிஸியாக இருந்தாலும் இருக்கையை விட்டு எழுந்து மிகுந்த பிரியமான ஒரு புன்னகையுடன் என்னிடம் சில சொற்களை பேசினார். கடும் உழைப்பு, அபாரமான எழுத்தாற்றல், அரியதான படைப்பாற்றலால் உச்சம் தொட்ட எஸ்.ராமகிருஷ்ணன் தமிழின் முதன்மையான படைப்பாளி. தற்போதைய படைப்பாளிகளில் நான் அவருக்குத்தான் முதலிடம் தருவேன். அவர் படைப்புகள் குறித்து ஒரு நான்கு மணி நேரம் கருத்தரங்கம் நடத்த ஆசை இதே போன்று புத்தகக் காட்சியில் இன்னொரு முக்கிய எழுத்தாளரை சந்தித்தேன். அவர்தான் ஷோபா சக்தி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் புத்தகங்கள் யாவையும் வாசித்து அவரை ஒரு வாசகராக பின்தொடர்ந்திருக்கிறேன். முதன் முறையாக கருப்புப் பிரதிகள் அரங்கில் அவரை சந்தித்தது எதேச்சையானது என்றாலும் என் வாழ்வில் ஒரு முக்கியமான தருணம். நான் வாங்கிய அவருடைய இச்சா நாவலில் கையெழுத்திட்டு தந்தார்..சென்னையில் ஒரு நாள் அவருடன் உரையாட ஆசை. நேரம் வாய்க்குமா பார்க்கலாம். அடுத்து சந்தித்த முக்கியமான நண்பர் தருமபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த என் முக்கிய நண்பர்களில் ஒருவரான தங்கமணியால் அறிமுகம் செய்யப்பட்ட அருமையானநண்பர் ஜெயவேல். கிடங்குத் தெருவைப் பற்றி அத்தனை பெரிய ஈடுபாட்டை ஜெயவேலை போல் வேறு யாரிடமும் நான் பார்க்கவில்லை. எத்தனை பெரிய மொழி ஆற்றலுடன் கிடங்குத் தெருவை எழுதி சினிமா கினிமா என எழுதிட்டிருக்கீங்க ,கிடங்குத் தெருவை மீண்டும் வெளியிடுங்கள். புதிய நாவலை எழுதித்தாருங்கள் என்று அன்புடன் கடிந்துக் கொண்டார் ஜெயவேல், அடுத்த புத்தகக் காட்சியில் உங்கள் 2 நாவல்களும் வராவிட்டால் வந்து அடிப்பேன் என்று கூட உரிமையுடன் திட்டினார். அவருடைய அன்புக்கும் வாசிப்புக்கும் தலைவணங்குகிறேன். ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஒரேயொரு வாசகன் கிடைப்பதும் பூர்வ ஜென்ம புண்ணியம்தான். நண்பர் சூர்யராஜன் பெரும் நோயிலிருந்து மீண்ட சோர்வால் நடக்கமுடியாமல் அமிர்தா பதிப்பக அரங்கில் நண்பர்களுடன் உட்கார்ந்துவிட்டார். புத்தகமும் வாங்கவில்லை. மனது கவலைப்பட்டது. சூர்யராஜன்மிகச்சிறந்த எழுத்தாளர். பிரபஞ்சன் அவருடைய சிறுகதைகளின் ரசிகர். பல முக்கிய படைப்பாளிகளை ஒரு கணத்தில் கடந்துசெல்லக் கூடிய படைப்பாற்றல், திரைப்பட அறிவு, தேனீயைப் போன்ற சுறுசுறுப்பு கொண்ட ஒரு நண்பர் இப்படி நோய் நிதிப்பற்றாக்குறை, முதுமையால் தளர்வதை என்னால் காண முடியவில்லை. நலமாக வாழ்க சூர்யராஜன் வாசக சாலையில் கவிஞர் மனுஷியையும் அவர் நகமும் சதையுமான அகிலா ஸ்ரீதரையும் சந்தித்தேன். பிரபஞ்சன் இறுதி ஊர்வலம் பாண்டிச்சேரியில் நடைபெற்ற போது பேண்ட்டும் டிசர்ட்டும் போட்டு சின்னஞ்சிறு பெண் போல மழைக்கு ஒதுங்கியிருந்த மனுஷியை சற்று தூரத்தில் பார்த்தேன். பேசவில்லை. பிரபஞ்சன் அடிக்கடி குறி்பபிடும் பெண் படைப்பாளிகள் பெயரில் மனுஷிக்கும் தமயந்திக்கும் முக்கிய இடமுண்டு. பல முறை அவருடன் பேச முயற்சி. பெண்களைக் கண்டால் விலகிவிடும் என்புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும். எங்கே பெரிய பையுடன் வருவீங்கன்னு பார்த்தா மூனே மூணு புத்தகங்களுடன் வருகிறீர்கள் என கேட்டார் மனுஷி. எனக்கொரு இமேஜ் அப்படி இருக்கு எனத் தெரியும். பெரிய பையுடன்தான் வந்தேன். சுமக்க முடியாமல் நண்பரின் புத்தகக் கடையில் வைத்திருக்கிறேன் என்று தெரிவித்துக் கொண்டேன். . நிறைய புத்தகங்களை வாங்கினேன் ,நாஞ்சில் நாடன்,சோ.தருமன், நெய்வேலி ராமலிங்கம், மந்திர மூர்த்தி அழகு, உதயகண்ணன் ,அழகிய சிங்கர், கிருபாகரன், ஆசு என நிறைய நட்புகளுடன் சில மணித்துளிகள். நான்கரை மணிக்கு கண்ணில் தூக்கம் சொக்க விடைபெற்றேன். ஆறு மணிக்கு வீட்டுககு வந்துவிட்டேன். பசி தூக்கம் தனிமை...வாழ்க்கையின் சூட்டுக்கு எத்தனை பெரிய இளைப்பாறுதல் இந்த நட்புகளும் புத்தகக் காட்சியும்.... தொடர்ந்து நான்கு நாட்களாக புத்தகக் காட்சி விஜயம். முதலில் சந்தித்தது கவிஞர் ஈழவாணியை. அவர் பெயரை அறிந்திருக்கிறேன். பார்ப்பதற்கு சற்று குண்டாக இருந்தாலும் அத்தனை இனிமையானவராக இருக்கிறார். அவர் நடத்தும் பூவரசி கலைவிழாக்களுக்கு ஸ்பான்சர்கள் தேடிக் கொண்டிருப்பதாக கூறினார். எனக்கு பத்து ரூபாய் கடன் தரக்கூட ஆளில்லை. நான் யாரை சொல்வேன். ஆனாலும் கேட்டுக் கொண்டேன். அவரை விட்டு நகர மனம் வரவில்லை. இத்தனை நல்ல மனிதத்துவம் ஒரு மனிதர் பெண் உடலில் இருப்பதால் அதை விட்டு எத்தனை காலம் தூரமாக இருந்துவிட்டேன் என நினைத்துக் கொண்டேன். கொஞ்சமாக வயதாகி விட்டதல்லவா...இனி பெண்களுடன் தயக்கமின்றி பேச வேண்டும். அவருடைய புதிய நாவலை விலை கொடுத்து வாங்கினேன். கவிதைத் தொகுப்பை பரிசாக தந்தார். நானும் என் சினிமா நூல்களை அவருக்குப் பரிசளித்தேன். இத்தகைய புதிய நட்புகளுக்கு புத்தகக் காட்சி வழிவகுக்கிறது. அவருடைய புத்தகங்களைப் படித்து விட்டு எழுதுகிறேன். அப்புறம் நண்பர் உதயா கண்ணனை பார்த்தேன். புத்தகக் காட்சியில் பொங்கல் நாளில் கூட கூட்டமில்லை. ஏன் என்று கேட்டால் அவரும் அதே கேள்வியை வேதனையுடன் திருப்பிக் கேட்டார். என் பங்குக்கு அவர் புத்தகக் கடையில் 125 ரூபாய் வியாபாரம் செய்து வந்தேன். புத்தகக் காட்சி பற்றி நிறைய விமர்சனங்கள், கண்டனங்கள் எழுகின்றன. இருக்கட்டும். ஜனநாயகத்தில் எதிர்ப்புக் குரல்களுக்கும் மதி்ப்பளிக்கத்தான் வேண்டும். எனக்கும் சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன. வெளியே ஒரு பெரிய மேடை இருக்கிறது. நூல் வெளியீடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள். முதலமைச்சர் முதல் இந்த ஆண்டு தலைதூக்கிய கடைக்குட்டி எழுத்தாளன் வரை எவர் எவரோ அதில் பேசிமுழக்குகிறார்கள். வெளியே பாப்கார்னும் சிக்கன் சூப்பும் சாப்பிடும் கூட்டம் கேட்கிறதா தெரிவியவில்லை. நடந்து களைத்து இளைப்பாற நாற்காலிகளில் உட்காருபவர்கள் கேட்கக் கூடும். நானும் தான் 35 ஆண்டுகளாக நாவல் ,சிறுகதை ,கவிதை, திரைப்படம் ,சிற்றிதழ் சார்ந்து இயங்கி வருகிறேன் .என் பெயரை பபாசி அறியுமா... ஒருமுறையாவது மேடையில் என்னை அழைத்தார்களா என்றால் இல்லை. அத்துடன் 20 ஆண்டுகளாக ஊடகத்துறையில முன்னணி செய்தி சேனல்களில் பணியாற்றியும் நான் அடையாளமற்றவனாக தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் உண்மையான படைப்புச் சூழல் தமிழ்ச்சூழல் .தமிழுக்காக கத்தி கத்தி தொண்டை வெந்தவர்கள் இதற்காக பேச மாட்டார்கள். முரசொலியும் துக்ளக்கும் தான் அவர்களுக்குப் பிரச்சினை. தமிழில் தீவிரமாக இயங்கக் கூடிய ஒரு படைப்பாளி தனது புத்தகங்களை வெளியிடவே பல ஆண்டுகளாகி விடுகின்றன. அவை விற்பனையாகி தீர்வதற்கு பல ஆண்டுகள். 2004ம் ஆண்டு வெளியான எனது கிடங்குத் தெரு நாவல் 2006ம் ஆண்டில் பாஷா பாரதிய சம்மான், தஞ்சை பர்காஷ் இலக்கிய விருது பெற்றது. எத்தனை பேர் அதை படித்தார்கள் .... மிகுந்த வலியுடன் எழுதப்பட்ட ஒருதமிழ் கிளாசிக் அந்தஸ்து மிக்க நாவலுக்கு கிடைக்கக் கூடிய எதிர்வினைகளே இதுதான். கிடங்குத் தெரு தமிழின நூறு சிறந்தநாவல்களில் ஒன்று என நிறைய பேர் பேசுவதை கேட்கிறேன். ஒரு தமிழ்ப் படைப்பாளி வேறு ஒரு வேலை அல்லது தொழிலை நம்பி இயங்க வேண்டியிருக்கிறது. அத்தொழில் அவனை கழுத்தை நெறித்து கொன்றுவிடும் வரை அவன் முடிந்தவரை தனது படைப்புகளை தருகிறான். பிரபஞ்சன் வேறு வேலை இல்லாததால் முழு நேர எழுத்தாளரானார். அவர் உயிரைப் பறிக்க அதுவும் ஒரு காரணமாகி விட்டது.மிகுந்த ஆனந்தமாகவும் மன உளைச்சலுடனும் பிரபஞ்சனை பல்வேறு தருணங்களில் சந்தித்து இருக்கிறேன். புத்தகங்கள் யாருக்காக எழுதப்படுகின்றன. யார் வாசிக்கிறார்கள் முகநூலில் வேறு யார் பிறர் புத்தகங்களை பற்றிய பதிவுகளை போடுகிறார்கள் ..அதனை எத்தனை பேர் படித்து எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவை மேம்படுத்துவது பற்றி நாம் யோசிக்கலாம். இதுான் இன்றைய சிந்தனை. --------------------

புத்தகக் காட்சி 2023 காகிதங்களின் காட்டில் தொலைவோம்...... செந்தூரம் ஜெகதீஷ்

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சி ஒரு அறிவுத் திருவிழாதான். புத்தகங்களுடனான உறவு நமக்கு பள்ளிப்பருவத்திலேயே படிக்க கற்றுக் கொள்ளும்போதே ஏற்பட்டு விடுகிறது. புத்தக வாசனை இல்லாமல் யாரும் அறிவு பெற்று விட முடியாது. கல்வியைத் தாண்டியும் படிக்க வேண்டியவற்றின் மீதா ன நமது கவனமும் ரசனையும் தான் புத்தக வாசிப்பின் முதல் அஸ்திவாரம், புத்தகக் காட்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துப் போவது சாலச் சிறந்தது. சென்னை புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை மிகப்பெரியது .அதனால் அதற்கு பெரிய மைதானம் தேவைப்படுகிறது. மைதானம் என்றால் மண். மண் பகுதி என்பதால் அடிப்படை வசதிகள் சாலைகள் பார்க்கிங் இடங்களுக்கு எப்போதும் நெருக்கடிதான். தவிர வரும் கூட்டமும் அதிகம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு காயிதே மில்லத் கல்லூரி அமைந்தகரையில் உள்ள ஒரு கல்லூரி என கல்லூரிவளாகத்தில் புத்தகக் காட்சிகள் நடைபெறும் . அதிகமான ஸ்டால்களும் புத்தக அச்சாக்கமும் அப்போது இருக்காது. குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் மட்டுமே புதிய புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வரும் .சாரு நிவேதிதா, ம.வே.சிவகுமார் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகக் கட்டுகளை சுமந்துக் கொண்டு புத்தகக் காட்சிகளுக்கு மூச்சிரைக்க ஓடி வரும் காட்சிகள் சகஜம். இப்போது அச்சுத்தொழிலில் அசுரப் பாய்ச்சல் ஏற்பட்டது காரணமாக குடிசைத் தொழில் போல பதிப்பகங்கள் பெருகிவிட்டன. எழுத்தாளர்களே பதிப்பாளர்களாக மாறி விட்டனர். இதனால் அதிகளவில் புத்தகங்கள் ஆண்டுதோறும் வெளியாகின்றன .அதற்கு ஏற்ப ஸ்டால்களும் அதிகரித்துள்ளன. இடத்துக்கான தேவையும் அதிகரித்து புத்தகக் காட்சிகள் கல்லூரி வளாகத்தில் இட நெருக்கடியால் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அரசு ஒரு முறையான வளாகத்தை அனைத்து வசதிகளுடனும் புத்தகக்காட்சிகள், சர்வதேச திரைப்பட விழாக்கள், நூல்வெளியீடுகள், பொருட்காட்சிகள் நடத்த அமைத்துத் தரலாம். எந்த அரசும் செய்யவில்லை. தீவுத்திடல் அரசியல் மற்றும் கேளிக்கைக் கூட்டங்களுக்கு மட்டும் பயன்படுகிறது. சென்னையின் இட நெருக்கடியால் புத்தகக் காட்சிகள் அவஸ்தையோடு தான் நடைபெறுகின்றன. பதிப்பாளர்கள் புத்தகக்கட்டுகளை சுமந்து ஆட்டோக்களிலும் கார்களிலும் குறுகிய பாதைகளில் செல்வதைக் காண முடியும். வாசகர்களும் பொதுமக்களும் நந்தனம் பகுதியில் நடைபெறும் புத்தகக்காட்சிக்கு பேருந்துகள், மெட்ரோ ரயில் , ஆட்டோக்களில் எளிதாக வந்து சேர்கின்றனர். ஆனால் அவர்கள் வாசலில் இருந்து உள்ளே சென்று வெளியில் வருவது என்பது ஒரு தனி தேசாந்திரப் பயணம். குடி நீர் கழிவறை வசதிகள் கட்டாயம் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம். மலை உச்சியிலும் சிக்னல் கிடைப்பதாக விளம்பரப்படுத்தும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புத்தகக் காட்சியில் புகுந்தவர்களுக்கு சிக்னலை நிறுத்தி விடுகின்றன. இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் காட்சி என்று அரசு அறிவித்துள்ளது. அதற்காகவாவது உலகத்தரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பொதுவாக வசதிகள் ஒருபுறமிருக்க புத்தகக்காட்சிகளின் அவசியம் அதன் சமூகப்பங்களிப்பு பண்பாட்டு தாக்கம் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புத்தகக்காட்சி சென்னையில் மிகப்பெரியதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆயிரக்கணக்கில் அரங்குகள், லட்சக்கணக்கில் புத்தகங்கள், கோடி்ககணக்கான ரூபாய்க்கு விற்பனை. ஆனால் ஒருமுறை மட்டும் அங்கு போய் முழுதாக சுற்றிப்பார்த்து விட முடியாது. பகுதி பகுதியாக பலமுறைதான் முழு புத்தகக்காட்சியைக் காண வேண்டும். புத்தகக் காட்சியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், கல்வி சார்ந்த பிரிவு ஒன்று .இது மாணவர்கள் பேராசிரியர்கள் போன்றோருக்கான இடமாக இருக்கும். அங்கு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் , கூட்டங்கள், கலந்துரையாடல்கள் ஆலோசனைகள் நடத்தப்படலாம் .முக்கியமாக நீட் போன்ற அசுரனிடமிருந்து அச்சப்படும் உயிர்களை பாதுகாக்கலாம், இன்னொரு பிரிவு இலக்கியத்துக்கு என்று முழுமையாக ஒதுக்கலாம். அதிகளவில் விற்பனையாகும் நவீன இலக்கியங்களுடன் நாளிதழ்கள் வார இதழ்களின் அரங்குகள் இடம் பெறலாம். இலக்கிய ஆர்வலர்கள் வாசகர்கள் அந்தப்பகுதியை மட்டும் சுற்றிப் பார்த்து வெளியே வர அது உதவியாக இருக்கும். தேவையில்லாமல் பல முறை பல தேவையில்லாத இதர பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது . புதிய புத்தக வெளியீடுகள், கவியரங்குகள், உரையாடல் எழுத்தாளருடன் சந்திப்பு புத்தக விமர்சனம் என்று சிறிய அரங்குகள் அமைத்து புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தலாம். மூன்றாவது பகுதியை கேளிக்கை பகுதியாக வைக்கலாம் .உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், கீழடி அரங்கு, தொல்லியல் ஆய்வுகள், கோவில் சிற்ப வரலாறுகள், ஓவியக்காட்சிகள், குறும்படங்கள் திரையிடல் போன்றவை பலரை உற்சாகப்படுத்தும். இவற்றை சில நாட்கள் இடைவெளியில் தனித்தனியாகவும் நடத்தலாம். எல்லாவற்றையும் கலந்து ஒரே அரங்கில் வைக்கும் போது புத்தகக் காட்சியின் இட நெருக்கடி அதிகரிக்கிறது. ஆனால் என்னதான் நெருக்கடி வசதி குறைபாடு இருந்த போதும் தஞ்சைப் பரகாஷ் கூறியது போல விதியின் பின்னால் புறப்பட்டுச் சென்றுவிட்ட 300 பேர் எப்போதும் சிற்றிதழ் இலக்கியம் நாடி புத்தகக்காட்சிகளுக்கு வந்துக் கொண்டே இருப்பார்கள். வெளிநாட்டில் இருந்து வரும் எழுத்தாளர்கள் வாசகர்கள் இளம் வாசகர்கள் என்று இந்த எண்ணிக்கை இப்போது இருமடங்காக இருக்கலாம். இவர்கள் தான் புத்தகக் காட்சிகளின் அடிப்பை சுவாசக்காற்றாக உலா வருகிறார்கள் . ஒருவர் டிராலியில் ஜெயமோகனின் அத்தனை நூல்களையும் வாங்கிக் கொண்டு சென்ற காட்சியைக் கண்டு அதிர்ச்சியும் நமக்கு ஏற்படலாம். மலிவுப்பதிப்பில் புதுமைப்பித்தன், குபரா படைப்புகள், ப.சிங்காரம் நாவல்கள், என்று புத்தகங்கள் புதிய வாசகர்களுக்கு புதையல்களாகக் கிடைக்கின்றன. இந்த ஆண்டு திரைப்படத்தின் வருகையால் பொன்னியின் செல்வன் அதிகளவில் விற்பனையாகும். எப்போதும் போல எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சுஜாதா ,ஷோபா சக்தி, பா.ராகவன் போன்ற தனி வாசகர்கள் கொண்ட எழுத்தாளர்களின் புதிய நூல்களும் அவற்றை வாங்குவதற்காக வரும் வாசகர்களும் இந்தப் புத்தகக் காட்சியைக் கொணடாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அனைவரிடமும் இந்நேரம் வாங்க வேண்டியநூல்களின் ஒரு பட்டியல் கையில் தயாராக இருக்கும். இந்த முறை புத்தகக் காட்சியில் வாங்கக்கூடிய புத்தகங்கள் அலமாரிகளில் தூங்கிக் கொண்டு அடுத்தப் புத்தகக் காட்சியில் தான் தூசு தட்டும் நிலைமை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வாசகர்கள் பொறுப்பு. நல்ல புத்தகங்களை அடையாளம் காணுதல் .அவற்றை பதிப்பித்த பதிப்பாளர்களிடமே நேரடியாக சென்று வாங்குதல், வாங்கிய ஒரு மாதத்திற்குள் வாசித்து விடுவது. அதைப்பற்றி பேஸ்புக் அல்லது இணைய இதழ்களில் ஒரு சிறு மதிப்பீடாவது செய்வதுதான் புத்தகக் காட்சி என்ற செயல்பாட்டுக்கு நாம் செய்யக்கூடிய அணில் பங்காகும். சேகரிப்புக்கு என்றும் தனியாக நூல்களை வாங்கி வைக்கலாம், நூலகங்களுக்கு நல்ல நூல்களை வாங்கிப் பரிசளிக்கலாம். புத்தகம் வாங்க முடியாத நண்பர்களை அழைத்துச் சென்று அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கித் தரலாம். புத்தகங்களைத் தவிர ஏராளமான மனிதர்களை சந்திப்பதற்கும் தயக்கங்களை உடைத்து நேரடியாக உரையாடவும் புத்தகக்காட்சி தரும் வாய்ப்பு மகிழ்ச்சிக்குரியது. நல்ல நட்புகளையும் இந்த புத்தகக் காட்சி ஏற்படுத்தித் தருகிறது. ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது ஒரு கருத்தியலை சிந்தனையை அனுபவத்தை வாழ்க்கையை உள்வாங்கிக் கொள்வதுதான். அதனுடன் நமது கருத்தியலும் சிந்தனையம் அனுபவமும் வாழ்க்கையும் புத்துணர்வு பெறுகிறது. புத்தகங்களுடனான வாழ்க்கை என்பது தனிமையின் மிகப்பெரிய வரமாக இருக்கும். எப்போதும் எந்த மனநிலையிலும் ஒரு புத்தகத்தின் வாசிப்பு நம்மை இலகுப்படுத்தும் ஒரு செயல்பாடு என்பது என் அனுபவம். புத்தகக் காட்சிகளை ஊக்கப்படுத்துவோம். குறைகள் இருக்கும் .இருந்த போதும் இது ஒரு திருவிழா. அறிவுத்திருவிழா. புத்தகங்கள் இல்லாத வீடுகள் ஜன்னல் இல்லாத வீடுகளை விடவும் இறுக்கமானவை. புத்தகங்கள் காடுகளில் இருந்து வரும் காகிதங்களில் தான் அச்சிடப்படுகின்றன. ஒரு நல்ல புத்தகம் ஒரு நிறைவான கானக அனுபவம்தான். இசையைப் போல மனிதனின் வன்மங்களைத் தணித்து மனத்தை சமன்படுத்த புத்தகங்களால் தான் முடியும். புத்தக விழாக்களைக் கொண்டாடுவோம். ஆறாம் அறிவை வீணடிக்க வேண்டாம். இந்த ஆண்டு புத்தகக் காட்சி நிறைய எதிர்பார்ப்புகளைத் தந்துள்ளது. எத்தனையோ அச்சகங்கள் இரவு பகலாக இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான புதிய படைப்புகள் எழுதப்படுகின்றன. எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடன் வாழப்பழகுவோம். அதைப் பழக்கப்படுத்த குடும்பத்துடன் வாருங்கள் புத்தகக்காட்சிகளுக்கு. ஒரு அறிவின் சுடர் உங்களுக்கு அருளக் காத்திருக்கும்.

Sunday 13 December 2020

அஞ்சலிகள்

அஞ்சலி பிரபஞ்சன், கவிஞர் மு.நந்தா, பேராசிரியர் பெரியார்தாசன், கோவை ஞானி செந்தூரம் இதழுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த மூன்று ஆளுமைகள் கடைசியாக வந்த இதழ் வரை துணை நின்றனர். இப்போது புதிய வடிவில் இதழ் வருகிறது. இவர்கள் மூவரும் இல்லை. மிகவும் வேதனையுடன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். என் இலக்கிய ஆசானாக விளங்கிய கோவை ஞானிக்கும் என் அஞ்சலி – செந்தூரம் ஜெகதீஷ் பிரபஞ்சன் பிரபஞ்சன் விடை பெற்றார் அன்பு நண்பரும் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பிரபஞ்சன் காலமான சேதியை அச்சத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.ஆனால் அந்தக் கணம் வந்ததும் மனம் கனத்தது. அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து உயிர் மீண்டு வந்தார்.நண்பர் சூர்யராஜனுடன் பிரபஞ்சனை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்சனில் சந்தித்து நலம் விசாரித்த போது கூறினேன் உங்களுக்கு இப்ப வாழ்க்கை போனஸ் கொடுத்திருக்கு சார் என்று . மிகுந்த யோசனையுடன் ஆமோதித்த அவர் ஆம் மீண்டும் மரணம் என்னைத் தொடுவதற்கு முன்பு பல காரியங்களை முடிக்க வேண்டும் என்று கூறினார். எத்தனையோ காரியங்களை முடிக்காமல்தான் அவர் விடைபெற்றுவிட்டார் என்று தோன்றுகிறது. நிறைய எழுதவும் அவர் திட்டமிட்டிருந்தார். எழுதியதே நிறைவாக இருப்பினும். புதுச்சேரியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரபஞ்சனை காண நானும் சூர்யராஜன், நிமோஷிணி ஆகியோர் திட்டமிட்டோம். அன்று காலை புதுச்சேரி ரயில் ரத்தாகி விட்டது. திரும்பிவிட்டோம். மீண்டும் போக முயற்சித்த நேரத்தில் அவர் விடை பெற்று விட்டார். பிரபஞ்சனை 80 களின் இறுதியில் ஜானி ஜான் கான் வீதியில் உள்ள ஒரு மேன்ஷனில் முதல் முறையாக சந்தித்து பசுமையாக நினைவில் உள்ளது.அதன் பிறகு பல முறை பலவீடுகளில் அவரை சந்தித்து உரையாடியிருக்கிறேன். என் நூல்வெளியீட்டு இலக்கிய நிகழ்ச்சிகளில் பணமே வாங்காமல் அன்புடன் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தி தமது செலவில் ஆட்டோ பிடித்துப் போன உன்னதமான மனிதர் அவர் பிரபஞ்சனிடம் பழகிய யாரும் அந்த அன்பை உணர்ந்திருக்க முடியும். நண்பர் யுகபாரதி சொன்னது மாதிரி எல்லோரும் அவருடன் ஒரு காபியை சரவணபவன் ஓட்டலில் சாப்பிட்டிருப்போம். படிக்கும் புத்தகங்களைப் பற்றியும் மனம் திறந்து பேசுவார். பெண்கள் அவர் உலகத்தின் படைப்பின் மூலக்கண்கள் .அவர்கள் இல்லாமல் அவர் உலகம் இல்லை. ஆனால் காமத்தை கடந்த ஒரு தெளிவும் வாழ்க்கையை குறித்த தீவிரமான ஒருபார்வையும் அவரிடமிருந்ததை பல பெண்கள் விரும்பினர். பிரபஞ்சனின் மறைந்த உடலுக்கு நண்பர் ஆர்.கே.ரவியுடன் சென்று அஞ்சலி செலுத்தி வந்தேன். அவர் தலை முடி யாவும் கொட்டியிருந்தது. பிரவுன் அல்லது வெண்ணிற சிறு ரோமங்கள் மட்டும் தெரிந்தன. கண்கள் ஆழமான தியானத்தில் இருப்பது போல் மூடியிருந்தன. அழுகை வந்தது .எத்தனையோ அழுகைகளை இதயம் புதைத்துக் கொண்டது போல் இதனையும் புதைத்துக் கொண்டேன். எனக்காக வானம் அழுதது மழை கொட்டியது. வருகிறேன் பிரபஞ்சன் சார் என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். அவர் மறைவு வாழ்க்கை இவ்வளவுதானா என்ற கேள்வியை மீண்டும் மனசுக்குள் எழுப்பியது. இதற்கு பதில் தெரியாமல் சென்னை வந்து சேர்ந்தேன். இன்று வரை அந்த பாதிப்பு நீங்கவில்லை.இருப்பதற்கென்று வருகிறோம்..இல்லாமல் போகின்றோம். -நகுலன் கவிஞர் மு.நந்தா கவிஞர் மு.நந்தா புதுவண்ணைப் பகுதியைச் சேர்ந்தவர். நாளை வேறு சூரியன் என்ற அவர் கவிதைத் தொகுப்பில் எந்த ஊர் எந்த பஸ், காசி மேடு, போன்ற கவிதைகள் இன்னும் மனதில் நிழலாடுகின்றன. தலைக்கு எண்ணெய் இல்லாத சிறுமியின் சிகையில் உள்ள சிக்குகளில்தான் இந்திய பொருளாதாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்று சிந்தித்த மகத்தான படைப்பாளி அவர். புத்தனின் கொள்கையில் என்ன குறை அவன் போதி மரத்திலா ரத்தக் கறை என சிங்களர்களிடம் கேள்வி எழுப்பியவர். எல்லாவற்றுக்கும் மேலாக 30 ஆண்டுக்கும் மேலாக .இனிய நண்பர். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் எழுதுவதிலும் அடங்காத ஆசை கொண்டிருந்தார். கை விரல் நடுங்க பேடில் வெள்ளைத் தாள்வைத்து எழுதிக் கொண்டிருந்தார். எப்போது சந்திக்கும் போதும் என் சட்டைப் பையில் இருக்கும் அழகான பேனாக்கள் மீது அவர் கவனம்செலுத்துவார்.நானும்விரும்பியே பல பேனாக்களை அவரிடம் தாரை வார்த்தேன். அவர் எழுத வேண்டும் என்று தீராத ஆவல் எனக்கிருந்தது. நந்தாவும் சூர்யராஜனும் நானும் ஒருதிரிசூலத்தின் மூன்றுமுனைகளாக கன்னிமாரா நூலகத்திலும் சென்னை திரையரங்குகளிலும் கையேந்தி பவன்களிலும் வலம்வந்த நாட்கள் மறக்க முடியாதவை. சினிமா கனவுகளும் நிறையவே இருந்தன  அவருக்கு நான் கற்றுக் கொண்ட பல வற்றில் நந்தாவின் பங்கும் சூரியராஜனின் பங்கும் முக்கியமானது. அதை மறுக்கவும் மறக்கவும் மாட்டேன். நந்தாவின் இழப்பு மிகவும் வருத்துகிறது. போய் வா நண்பா...நந்தாவின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டு திரும்பும் போது பைபிளின் வாசகம் கண்களை சந்தித்தது. மரித்தேன்ஆனால் மீண்டும் உயிர்த்தெழுவேன் உயிர்த்தெழு நந்தா உன் புகழ் வாழ்க. பேராசிரியர் பெரியார்தாசன் ந்தூரம் கைப்பிரதியை அச்சு இதழாக்க வேண்டும் என்று அவர்தான் முதலில் ஊக்கம் அளித்தார். பணமும் அளித்து அச்சகத்தையும் தெரிவித்து உதவினார். அவரையே சிறப்பாசிரியராக கொண்டு செந்தூரம் வெளியானது .இந்த இதழ் நிச்சயம் அடுத்த இதழ் லட்சியம் என்று சிற்றிதழ்களின் அமர வாசகத்தை அவர்தான் அப்போது உச்சரித்தார். அடையாளமற்று திரிந்த எனக்கு செந்தூரம் ஜெகதீஷ் என்ற அடையாளம் அவரால்தான் உருவானது. எந்த புத்தக விழாவுக்கு வர அழைத்தாலும் வரிவிடாமல் புத்தகத்தை படித்து வந்து ஆழமாகப் பேசுவார். எனது கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவில் வருவதாக ஒப்புக் கொண்ட ஞானக்கூத்தன் போன்றவர்கள் வராதபோதும் அக்குறை தெரியாத வகையில்அபாரமாகப் பேசி என்னைக் கண்கலங்க வைத்தார். கடைசியில் அவர் அல்லாதாசனாக குரானிடம் சரண் அடைந்தது பற்றியும் எனக்கு ஆச்சரியமில்லை. அவருக்குள் இருந்த பகுத்தறிவு வாதியை உலகம் அறிந்தது போல அவருக்குள் இருந்த ஆன்மீகவாதியையும் நான் புரிந்துக் கொண்டேன். பலமுறை திருமந்திரத்தையும் திருவாசகத்தையும் ஆன்மீகவாதிகளை விடவும் அழகாக ஒப்புவிப்பதைப் ர்த்திருக்கிறேன்.அவர் மீது கூறப்பட்ட அவதூறுகள் விமர்சனங்கள் எனக்கு ஒரு பொருட்டல்ல...நல்லதொரு ஆசானாகவே அவர் எனக்கு இருந்தார். எத்தனைக் காலம் அவருடன் இருந்தேனோ அத்தனைக் காலமும் புதிதாக கற்றுக்கொண்டேன். அத்தனைக் காலமும் நான் வளர்ந்துக் கொண்டிருந்தேன். பெரியார்தாசனின் இறுதிச்சடங்கில்அவர் முகத்தைப் பார்க்கவும் துணிவில்லைஅவரது இறந்த உடலையோ பேசாது மௌனி்த்த உதடுகளையோ வெளிறியமுகத்தையோ காணவும் கண்டு அழவும் எனக்குத் துளிக்கூட விருப்பமில்லை எனவே இறுதிச்சடங்கிற்குக்கூட போகவில்லை. அவர் என்றும் எனக்குள் அணையாத அறிவுச் சுடர். பின்குறிப்பு இந்த நபர்கள் மறைந்து பல ஆண்டுகளாகிவிட்டிருந்த போதும் தாமதமாக அஞ்சலி செலுத்துவதற்கு காரணம் செந்தூரம் மீண்டும் வரும் போது இவர்கள் இல்லை என்பதுதான். தமிழுக்கு என் வணக்கம் கோவை ஞானிக்கு அஞ்சலி - செந்தூரம் ஜெகதீஷ் கோயமுத்தூருக்கு நைட்டியும் சுடிதாரும் விற்பதற்கு கடை கடையாக செல்லும் பணியின் நிமித்தமாக அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தேன். நிகழ் இதழ் ஆசிரியர் கி.பழனிசாமி முகவரி காளீஸ்வரன்நகர் காட்டூர்.... என்பதைப் பார்த்து விசாரித்த போது சில நண்பர்கள் அழைத்துப் போனார்கள். ஒற்றைப் படிக்கட்டு ஏறி முதல் மாடியில் மேலே போனால் ஒரு சிறு அறை. அறை முழுக்க புத்தகங்கள். சில நாட்களில் ஞானியின் குடும்பத்தினருள் ஒருவராக ஆகிப்போனேன். அவருக்கு புத்தகம் படித்து காட்டுவது, நிகழ் பணிகளில் படைப்புகளைத் தேர்வு செய்வது, புதிய புத்தகங்களைப் பற்றி அவருக்கு தெரியப்படுத்துவது ஆகியவை முக்கியமானவை. நிகழ் பணியில் நான் கூட இருந்த போது தேர்வு செய்து சில படைப்புகளை வெளியிட்டோம். அதில் ஒன்றுதான் மனுஷ்யப்புத்திரனின் கால்களின் ஆல்பம் என்ற புகழ் பெற்ற கவிதை. அக்கவிதையை சுஜாதா எடுத்துக்காட்டிய பின்னர் மனுஷ் பிரபலமானார். புத்தகங்கள் படித்து விமர்சனம் எழுதிக் கொடுப்பேன். ஞானிக்கு என் மீது கூடுதலான பிரியம் இருந்தது. நிறைய படிக்கிறவனாகவும் அவர் என்னை புரிந்துக் கொண்டதன் விளைவாக தன்னுடன் அதிக நேரம் இருக்கும்படி கேட்டுக் கொள்வார். ஓஷோ கடவுள் நம்பிக்கை எல்லாவற்றையும் மார்க்சீய மெய்யியல் என்ற ஒற்றைக் கோட்பாட்டினுள் கொண்டு வர முடியும் என்று ஞானி என்னுடன் உரையாடுவார். கடவுள் நம்பிக்கையை எப்படி அய்யா மார்க்சீயத்துக்கு உட்படுத்த இயலும் என்று கேட்பேன் .அதையும் மார்க்சீய மெய்யியலுக்குள் கொண்டு வரலாம் என்று உரைப்பார் ஞானி. அந்தவகையில் தமிழில் அவர் தான் எனக்கு நேரடியான ஆசான். என் கவிதை நூலான இன்னும் மிச்சமிருப்பவைக்கு முன்னுரை எழுதித் தந்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க்கவிதையின் சரடு ஒன்று எனது கவிதைக்குள் ளும் ஓடுகிறது என்பது அவருடைய முக்கியமான விமர்சன வரி. கிடங்குத் தெருவை படிக்க வைத்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். ஞானியுடன் என் சந்திப்புகள் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னர் குறைந்துவிட்டன. காரணம் கோவை போனது குறைந்துவிட்டதுதான். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவை போயிருந்த போது இரண்டு பேரை பார்க்க மனம் துடித்தது. ஒன்று விபத்தில் சிக்கிய என் நண்பர் ஷாராஜை. இன்னொன்று கோவை ஞானியை. என்னிடம் இருந்த நேரமோ ஒன்றரை நாட்கள். ஆனால் நேரமின்மையால் ஷாராஜையும் பார்க்க முடியாமல் ஞானியையும் சந்திக்க முடியாமல் திரும்பி விட்டேன். அதற்குப் பின் கோவிட் 19 லாக் டவுன்கள் ரயில்கள் ரத்து இப்போது கூட போக முடியாத நிலை. ஞானியின் எழுத்துகள் வாழும். அதனுடன் இனி வாழ்வேன்.

Thursday 5 November 2020

புத்தகக் கடைகள்

மீண்டும் மீண்டும் ஒரு மனிதன் புத்தகக் கடை நோக்கி செல்ல வைப்பது எது என்று புரியவில்லை. படித்து தேவைப்படாத 30 ஆங்கில புத்தகங்கள் ஒரு பையில் போட்டு வைத்திருந்தேன் .அதை ஒரு புத்தக வியாபாரியிடம் கொண்டு போனேன்.₹ 300 தருவதாக கூறினார் .எல்லாம் பெரிய புத்தகங்கள். ஓஷோ நூல்கள் சிலதும் இருந்தன.கொடுக்க மனமில்லாமல் திருப்பி சுமந்து வீட்டுக்கு வந்தேன்.மறுபடியும் இன்று காலை நல்ல வெயில் காயுது என அண்ணாசாலை சிவா புத்தகக் கடைக்கு எடுத்துச் சென்றேன். சகோதரன் இறந்த துக்கத்தில் பல நாட்களாக கடையைத் திறக்க மனமின்றி இருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு தான் கடையைத் திறந்தார்.கொரோனா அச்சம் காரணமாக யாரும் புத்தகங்களை வாங்க வருவதில்லை என்று சொன்ன அவர் புத்தகங்களை வாங்க மறுத்து விட்டார். பின்னர் பணம் மெதுவாக அடுத்த மாதம் வாங்கிக் கொள்வதாக சொன்னதும் எடுத்துக் கொண்டு கணக்குப் போட்டார்.₹ 680 என சொன்னார். குறைவாக தெரிந்தும் கொடுத்து விட்டேன்.அவரிடம் ₹ 140க்கு இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு ₹ 520 பாக்கி விட்டு திருவல்லிக்கேணி சென்றேன். அதற்குள் வானம் இருட்டியது.வெயிலை நம்பி கடை போட்டவர்கள் அவசரமாக புத்தகங்களை மூடிக் கொண்டிருந்தனர் .கிடைத்த சில நிமிடங்களில் 3 கடைகளைப் பார்த்து ₹400க்கு புத்தகங்களை வாங்கினேன். அவை சிறந்த புத்தகங்கள். குறைந்த விலையில் மழை காரணமாக பணத்தேவை யின் பொருட்டு கொடுத்து விட்டார்கள் வியாபாரிகள். குறைந்த விலையில் புத்தகங்கள் விற்ற போது எழுந்த வருத்தம் குறைந்த விலையில் வேறு முக்கிய புத்தகங்கள் வாங்கியதால் மகிழ்ச்சியாக மாறியது.முதலில் கேட்ட கேள்விக்கு வருகிறேன்.ஒரு மனிதன் மீண்டும் மீண்டும் புத்தகக் கடைகளை நாடிச் செல்வது எதற்காக? குடும்பத்தில் இருந்து அந்நியமாதல். நட்புகளின் இழப்பு, காதல் கலவிக்கு ஒரு பெண்ணையும் அடையாத தனிமை,சுய கழிவிரக்கத்தை மறைக்க தன்னையொரு தனி மேதையென கருதுதல், மனிதர்கள் மீதான கோபம், வெறுப்பு , விலகல், அச்சம்,கசப்பு... கண்பார்வை முற்றிலும் இழந்து மடியும் வரை தவணை யில் சிறுக சாதல் என எத்தனை காரணங்கள் இருப்பதாக நான் கூற முடியும். என்னுடன் பேச யாருமில்லை. புத்தகங்களுடனே என் வாழ்க்கை முழுவதும் உரையாடிக் கொண்டிரூக்கிறேன்.அந்த உரையாடலுக்காவே இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.அதில் ஒரு சந்தோஷம் கூட கண்டு விட்டேன்.

இன்று வாசித்த புத்தகம் 7- 10

இன்று வாசித்த புத்தகம் 7 குரல்களைப் பொறுக்கிச் செல்பவன். கவிஞர் ஆசு. ஆ.சுப்பிரமணியன் என்ற ஆசுவை பல வருடங்களாகத் தெரியும். ஆறேழு புத்தகங்கள் எழுதினார் என்றும் தெரியும்.என் புத்தக பரண்களில் அவர் நூல்கள் இருக்கும் என்றும் தெரியும்.ஏன் இத்தனை காலமாக ஆசுவைப் பற்றி ஓரிரு வரிகளைக் கூட எங்கேயும் குறிப்பிடவில்லை என்று வெட்கினேன். மன்னியுங்கள் ஆசு உங்கள் எளிமையில் ஏமாந்து விட்டேன்.ஆசுவின் கவிதைப் புத்தகத்தைப் புரட்டிய போது என் முன்முடிவுகள் தகர்ந்தன.சிறப்பாக தன்னை வெளிப்படுத்திய ஒரு கவிஞனை அடையாளம் கண்டேன்.புத்தகத்தில் நுழையும் முன்பு கவிஞர் ஞானக்கூத்தன் வேறு மனம் திறந்து ஆசுவுக்கு மிகச்சிறந்த அங்கீகாரம் அளித்து முன்னுரை எழுதியுள்ளார். எனவே மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு கவிதையாக கடந்து சென்றேன்.ஆசுவின் கவிதைகள் அவரைப் போலவே எளிமையாவை.சில கவிதைகளில் சொல் விரயம் தெரிகிறது. சில கவிதைகள் சொல்லை ஆள்கின்றன. இதற்கு காரணத்தை ஆசுவே தன் முன்னுரையில் கூறுகிறார். மொழியின் வேருக்குள் என் கவிதை நீளுகிறதா என்றால் நான் கொண்டிருக்கும் சமூக உணர்வுள்ள பொறுப்பு மிக்க கவிதைக்கு எதுவரை மொழி நீளுகிறதோ அதுவே போதுமானது. மிகச்சிறந்த பார்வை ஆசு. கவிதையைப் பார்க்காமல் அவன் யார் எந்த சாதி எந்த குழு என்று பார்க்கும் தமிழ்ச்சூழலில் ஆசு போன்றவர்கள் அடையாளம் காணப்படும் நாள் தாமதமாகலாம்.ஆனால் கட்டமைக்கப் பட்ட பிரம்மாண்டங்கள் சரிந்து விழும் போது ஆசு போன்ற கவிஞர்கள் கவனம் பெறுவது நிச்சயம். --------- இன்று வாசித்த புத்தகம் 8 மகரந்தத் துகள்கள் கவிஞர் வானவன் 2002ம் ஆண்டு எழுதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு. 18 ஆண்டுகளுக்குப் பிறகு கவிதை குறித்த மதிப்பீடுகள், ஹைகூ குறித்த பார்வைகள் நிறையவே மாறி விட்டதை வானவனும் உணர்ந்துக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன் . இது அவர் கவிதை களை விமர்சிக்கவோ தலையில் வைத்து கொண்டாடவோ அல்ல. நல்ல வரிகள் பலவற்றை இந்நூலில் கண்டேன்.எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது எனக்கும் என் வீட்டாருக்கும் உதவி வேண்டுமா எனக் கேட்டு முகநூல் வழியாக தொடர்பு கொண்ட அவரது தொண்டு உள்ளத்தையும் அன்பையும் நான் மறக்கவில்லை. இலக்கியக் கூட்டங்களில் விதைகளை இலவசமாக விநியோகம் செய்வதையும் பார்த்து மகிழ்ந்தவன் நான் . நண்பர் பா.உதயகண்ணன் கூறியது போல வானவனிடமிருந்து மேலும் சிறப்பான கவிதைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. இரவு பயணம் துணைக்கு நிலா என்று ஹைகூவை நெருங்கிய கவிஞர் வளர என் வாழ்த்துகள். ----------- இன்று வாசித்த புத்தகம் 9 அப்ராவின் உப்பு நீர் . அன்பாதவனின் பெயர் நன்கு அறிந்த ஒரு பெயர்தான்.சௌந்தர சுகன் கல்வெட்டு பேசுகிறது போன்ற சிற்றிதழ் களில் வந்த ஆக்கங்கள் மூலமாக அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறேன்.அவருடைய இந்த கவிதை நூல் இன்னும் அதிகமாக அறியச் செய்தது.முன்னுரையில் வதிலை பிரபா கூறியது போல அன்பாதவனின்எழுத்து நடை ஒரு தேர்ந்த பயணியின் தெளிவான நடை என்று எனக்கும் தோன்றியது. அவர் குறிப்பிட்ட கவிதை வரிகளை நானும் விரும்பி னேன் . உலகின் மிக உயர்ந்த கான்கிரீட் சிகரத்திலிருந்து நோக்குபவனின் கண்களில் தேங்கிய ஏக்கம் கடல்தாண்டி தெரியுமோ காதலினை வதனம் என்ற வரிகள் சிறப்பு. கோலியாத் பறவை,பைரவர்கள் போல சில கவிதைகள் அபூர்வமாக முழுமையான கவிதைகளாக மணம் வீசுகின்றன. இன்று வாசித்த புத்தகம். 10 உதிரும் இலை...யாழினி முனுசாமி கவிதைகள். நண்பர் முனுசாமி ஒரு பேராசிரியர். கவிஞர். முரண்களரி படைப்பகம் நடத்தி வருபவர். அவருடைய முதல் கவிதை நூல் 2005ம் ஆண்டு கனிமொழியின் முன்னுரையுடன் வந்துள்ளது. தவற விட்டேன்.அண்மையில் பழைய புத்தகக் கடையில் அவரது உதிரும் இலை கிடைத்தது.அன்பினால் நன்றி என்ற நீண்ட பட்டியலில் என் பெயரும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியம். நான் அவருக்கு என்ன செய்துவிட்டேன்? கவிதைகளில் ஆங்காங்கே கணவனாக,காதலனாக,இயற்கையை நேசிப்பவனாக ,சாதிய எதிர்ப்பாளனாக பல பரிணாமங்களைக் காட்டும் கவிஞர் தன் வயக் கவிதைகள் மூலமும் மனதை நெருங்கி வருகிறார்.வகுப்பறைகளுக்கு மட்டும் வயதாவதில்லை என்பன போன்ற பல வரிகளை ரசிக்க முடிகிறது .இத் தருணத்தில் இக்கவிதை சற்று கூடுதலாகப் பொருந்தும். எதிரி நயவஞ்சகமாய்ப் போர்த் தொடுக்கையில் ஒளிந்து கொள்ளுங்கள் உன் சகோதரனைக் காட்டிக் கொடுத்தாவது நீங்கள் பிழைத்துக் கொள்ளுங்கள்.எதிரி தரும் பெரும் பரிசுப் பொருள் கொண்டு வளப்படுத்திக் கொள்ளுங்கள்.பிறகு பேசுங்கள் நீயும் நானும் சகோதரன் ஒரே இனம் ஒரே நிறம். ..

on writing 2

On Writing. 1.Literature is mostly about having sex and not much about having children.Life is the other way round. David Lodge 2.Childhood is a writer's bank balance .Graham Greene 3.If it reads easy,it was writ hard. Ernest Hemingway 4 I am dying and that whore Emma Bovary will live forever. Gustave Flaubert 5.You write in order to say the things you can't say.It's a cry or a scream or a song. Samuel Beckett 6.What is the use of a book thought Alice "without pictures or conversations" Lewis Carroll. 7 We do not receive wisdom,we must discover it for ourselves after a journey that no one can take for us or spare us. Marcel Proust 8.Travel is the saddest of all pleasures. Paul Theroux. 9 Picasso when asked why he was always to be found on the balcony,painting the same view,replied "Because every moment the light is different,the colours are different,the atmosphere is different". 10 It is no sin to be neurotic Sigmund Freud 11 In solitude man is eaten up by himself,among crowds by the many. Friedrich Nietzche 12.Most people are mediocre,they want to see their mediocrty mirrored in print. Antony Burgess. 13.It was important to note how people looked..If you don't take into account their haircuts,the hang of their pants,their taste in skirts and blouses,their style of driving a car or eating a dinner,your knowledge is incomplete . Saul Bellow 14 Socially I am a cripple. Vladimir Nabokov 15.The worst thing of getting old is feeling young. Oscar Wilde 16 .Nothing can be created without loneliness .I have created a loneliness for myself which nobody can comprehend.It is very difficult to be alone!There are clocks and watches. Pablo Picasso 17.The only way to forget is to remember. Sigmund Freud 18.Work and love are the only ways in which human nature can come close to happiness or at least avoid misery .Sigmund Freud 19. There are no facts only interpretations.Friedrich Nietzsche 20.It is better to light a candle than curse the darkness.. Chinese proverb. { Excerpts from A writer's Commonplace book } by Rosemary Freedman

on writing 1

1 .Writers write from a sense of loss Andre Gide 2. No writer can be a joiner.He must preserve his independence at all costs.J.B.Priestley. 3.A writer knows more than he knows Nadine Gor dimer 4 This whole book is a draft_nay but the draft of the draft . Isaac Singer 5 .I hate everything that does not relate to literature . Conversations bore me.. to visit people bores me ,the sorrows and joys of my relatives bore me to my soul .Franz Kafka 6 George Orwell said that like all writers he was driven by some demon whom one can neither resist nor understand. 7.Writers are supposed to make you laugh and cry.That's what mankind is looking for Saul Bellow. 8 I think like a genius write like an accomplished author and talk like a child... Vladimir Nabakov 9.The creator is nothing the work is everything.Gustave Flaubert 10 Last week I spent five days writing one page. Gustave Flaubert 11.Every great novelist listens for that super personal wisdom,which explains why great novels are always a little more intelligent than their authors.Novelists who are more intelligent than their works should change their profession.Milan Kundra 12 I write 50 pages until I hear a foetal heartbeat. Henry Miller 13.If you are a writer by definition it seems to me you are neurotic.And the whole writing business is some way of coming to terms with it. Dorris Lessing 14.Originality is nothing but judicial plagiarism Voltaire 15.Writing is always creating order from disorder.Order is something that needs disorder to take form .The only order one can trust is the order of the mind,internal order.And nothing is more disordered than a human mind.Italio Calvino. 16.Writing is a form of therapy, sometimes I wonder how all those who do not write ,compose,or paint can manage to escape the madness,the melancholia,the panic and fear which is inherent in the human situation.Graham Greene.{ Picture of Henry Miller} ----------------

the international movie

தி இன்டர்நேஷனல் என்ற படம் பார்த்தேன்.முழுவதும் பார்த்தேன்.இத்தனைக்கும் படத்தில் ஒரு முத்தக்காட்சி கூட இல்லை. சுத்தமான யு படம். கதாநாயகன் ஒரு இன்டர்போல் ஏஜன்ட்.கதாநாயகி ஒரு மாவட்ட ஆட்சியர் மட்டத்தில் உள்ள ஒரு அதிகாரி. பன்னாட்டு வங்கி ஒன்று ஆயுதங்களை வாங்கி விற்பனை செய்ய பெரிய முதலீடு செய்கிறது .உலகில் அணு ஆயுதங்களை எல்லா நாடுகளும் குவித்து வைப்பதால் பெரும் போர்களுக்கு வாய்ப்பு இல்லாத கட்டாயம். ஆனாலும் மூன்றாவது உலக நாடுகளில் சிறிய யுத்தங்கள், மோதல்கள், கிளர்ச்சிகள்,புரட்சிகள் வெடிக்கின்றன.அதற்கு எல்லோரும் சிறிய ஆயுதங்களை வாங்க பல ஆயிரம் மில்லியன் டாலர்கள் செலவு செய்கின்றனர். ஆயுத பேரம் மூலம் அந்த பன்னாட்டு வங்கிக்கு அதிகமான லாபமில்லாத போதும் ஏன் அதில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?அந்த வங்கி ஆயுதங்களை தீவிரவாதிகள் கையில் கொடுத்து அதிக லாபம் காண்கிறது. ஆயுதங்களை தன் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இந்த உண்மையை அறிந்த நபர்கள் கொல்லப்படுகின்றனர். சர்வதேச சட்டங்கள்,வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளில் மோதலை மறைமுகமாக தூண்டி விடுகின்றன. எல்லோருக்கும் ஆதாயம் இருக்கிறது.யாரும் இந்த ஆட்டத்தை நிறுத்த முடியாது. சட்டமும் சிஸ்டமும் இடம் தராது.இதனை கிளைமேக்ஸில் உணர்கிறான் படத்தின் நாயகன்.சட்டத்தை விட்டு சிஸ்டத்தை மீறி அந்த கொடூர ரத்த வெறி பிடித்த ஆட்டத்துக்கு அவன் முடிவு கட்டுகிறான். படம் நல்ல திரைக்கதை வசனங்கள் சண்டை சாகச காட்சிகளுடன் விறுவிறு என நகர்கிறது.ஒரு லிப்டில் நாயகி நாயகனை பார்க்கும் போது அவன் முக வாட்டத்தை கவனிக்கிறாள்.ஷேவிங் செய்யாத முகம்.உறங்காத கண்கள். காலையில் சாப்பிட்டாயா என்று கேட்க நினைவில்லை என்கிறான்.தூங்கி எத்தனை நாளாச்சு எனக் கேட்கிறாள். தெரியவில்லை என்கிறான் ஒரு பெண்ணை படுக்கையில் பார்த்து எத்தனை நாளாச்சு என்றும் கேட்கிறாள் .Are you offering me என்று அவன் திருப்பி கேட்க நோ என்று அவள் சிரிக்கிறாள்.படத்தில் உள்ள ஒரேயொரு ரொமான்ஸ் காட்சி இதுதான்.

இன்று வாசித்த புத்தகம் 11-15

இன்று வாசித்த புத்தகம் 11 நான் வடசென்னைக்காரன். பாக்கியம் சங்கர். நண்பர்கள் சூர்யராஜன்,மு.நந்தாவுடன் பாக்கியம் சங்கரை சந்தித்து பேசிய போதெல்லாம் அவர் இத்தனை நல்ல எழுத்தாளராய் வருவார் என நினைத்தது இல்லை .ஒரு முறை எழுத்தாளர் பிரபஞ்சனுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது பாக்கியம் சங்கரை குறிப்பிட்டு நன்றாக எழுதுவதாக கூறினார். அதன் பின்னர் பாவையர் மலர் இதழில் அவர் எழுதி வந்த தொடர் தேநீர் இடைவேளையின் சில பக்கங்களை படிக்க நேர்ந்தது .சங்கரிடம் மிடாஸ் டச் என்ற மந்திரம் ஜாலம் செய்யும் தங்க செங்கோல் இருப்பதை அறிந்துக் கொள்ள எனக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை.ஆனந்த விகடனில் நான்காம் சுவர் தொடராக வந்த போது அவருக்காகவே விகடனை வாரம் தவறாமல் வாங்கினேன். பல அத்தியாயங்களைப் படித்து சிலவற்றை தவற விட்டேன். அது நூலாக வந்து பெரும் வரவேற்பை பெற்றதையும் அறிந்தேன்.நண்பர் நிமோஷினி விஜயகுமாரன் அழைப்பின் பேரில் பெரம்பூரில் நடைபெற்ற நூல் விமர்சனம் கூட்டத்தில் பார்வையாளனாக இரண்டு மணி நேரம் அமர்ந்து இருந்தேன்.காரணம் சங்கரின் எழுத்து ஏற்படுத்திய நம்பிக்கை. தொடர்ந்து என் அழைப்பை ஏற்று எனது இரண்டு சினிமா நூல்களின் வெளியீட்டு விழாவில் பாக்கியம் சங்கர் கடந்த ஆண்டு டிசம்பரில் கலந்துக் கொண்டு சிறப்பு செய்தார்.இதனிடையே எப்போதோ பழைய புத்தகக் கடையில் வாங்கிய பாக்கியம் சங்கரின் நான் வடசென்னைக்காரன் என்ற இந்தப் புத்தகம் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.பாவையர் மலரில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இது.ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிறுகதையின் நேர்த்தியுடன் எழுதப்பட்டுள்ளது.அசோகமித்திரன் கூறியது போல நன்றாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை சிறுகதைக்கு நிகரானது.அப்படித்தான் இந்த கட்டுரைகள் எடுத்ததும் கீழே வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் வாசிக்க வைத்தன.இந்த தொகுப்பில் வடசென்னையின் வாசம் அதிகம்.அதில் சில மதுக்கடை வாசனைகளும் இல்லாமல்லி, சசிகலா,ஆனந்தி போன்ற சில பெண்களின் மேனி வாசமும் இருக்கிறது.கானா கலைஞனின் பாடலுடன் ஜேசுதாஸ் காதல் கீதங்களும் இருக்கின்றன. கவியரங்குகள்,நண்பர்கள், காதலிகள் வந்து போகின்றன. ஆத்மாநாமும் கலாப்ரியாவும் பாபுவும் ஏனைய கவிஞர்களும் வருவதால் இதில் இலக்கிய வாடையும் வீசுகிறது. தண்ணீர் கேட்டு போன வீட்டில் நாராயண குருவும் நித்ய சைதன்ய யதியும் விவாதிக்கப்படுகின்றனர் .தன் வாழ்வையும் தன்னை சுற்றிச் சூழ்ந்து சுழலும் மனிதர்களையும் பாக்கியம் சங்கர் உன்னிப்பாக கவனித்து அதைப்பற்றி எழுதவும் செய்கிறார்.எழுத்து இயல்பாக வருகிறது. நான் படிக்கும்போது எந்தவித இடையூறையும் அது செய்யவில்லை.படித்து முடித்ததும் தபால்தலை மீது அழுத்தமாகப் பதித்த ஒரு முத்திரையாக மனத்தின் மீது அவர் எழுத்து பதிகிறது. அவர் அறிந்த வடசென்னையை நன்றாக அறிவேன்.அவர்கள் அந்நியர் அல்லர்.இனி சங்கரின் எழுத்தும் அந்த மனிதர்களுடனான உறவுக்கு ஒரு நட்புப் பாலமாக இருக்கும். -------- இன்று வாசித்த புத்தகம் 12 . A writer's commonplace book. என் அன்பு நண்பர் ஷாராஜ் Shahraj Strokes நாவல் எழுதுவது குறித்த ஒரு புத்தகம் படித்து முகநூலில் சிலாகித்து எழுதினார். ஆங்கிலத்தில் சுய முன்னேற்ற நூல்களை போல மிகவும் அதிகளவில் பேப்பர் பேக் பதிப்பாக கிடைப்பவை இத்தகைய போதனை நூல்கள் தாம்.இவற்றை நான் ஏராளமாகப் படித்திருக்கிறேன்.இலக்கியக் கோட்பாடுகள் அல்லது எழுத்தின் நுட்பங்கள் குறைவாகவும் எழுத்தை விற்பனை பண்டமாக்குவது எப்படி என்றும் கூறத்தக்க நூல்களே அதிகம் காணப்படும். அதே போன்று பொன்மொழி தொகுப்பு நூல்கள். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதைதான்.அபூர்வமாக சில நல்ல புத்தகங்களை காண முடிகிறது. அதில் இந்த நூலும் ஒன்று. எழுதும் கலை குறித்து உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கருத்துக்களை தொகுத்து தந்துள்ளார் இதன் ஆசிரியர் ரோஸ்மேரி ஃப்ரீட்மேன்.எழுத்தாளன் மனநோய் பிடித்த பிராணி என்றும் எழுதுவதன் வாயிலாகத்தான் தன் நோயைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். எழுதத் தெரியாத சாமான்ய மனிதர்கள் எப்படி தங்களது மனநோயை எதிர்கொள்கிறார்கள் என்று வியப்புடன் கேட்கிறார் ஒருவர்.எழுத்துக்கான ஊதியம் குறைவு உழைப்பு அதிகம் என்றும் ஓர் எழுத்தாளர் கூறுகிறார். நல்ல நாவல் குறித்த சில டிப்ஸ்களையும் இந்நூல் தருகிறது.அதில் ஒன்று... ஒரு நல்ல நாவலை எழுத நிறைய உத்திகளும் தொழில் நுட்பமும் தேவையில்லை. ஒரு எழுத்தாளர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். இன்று வாசித்த புத்தகம் 13 இன்று மழையால் பேருந்து பயணம். மதியம் எனக்குப் பிடித்த நேஷனல் ஆந்திர மீல்ஸ் சாப்பிட்டு அண்ணாசாலை ஹிக்கன்பாதம்ஸ் போனேன். தமிழ் நூல்களை தனி அறையில் வைத்துள்ளனர்.ஒவ்வொரு அலமாரியாகப் பார்த்தேன். அசோகமித்திரனின் செகந்திராபாத் சிறுகதைகள், புஷ்பா தங்கதுரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, மு.மேத்தாவின் சோழ நிலா,மகுட நிலா, கண்ணதாசன் எழுதிய நூல்கள், ஆத்மார்த்தி யின் சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற நூல்கள் வாங்கும் ஆவலைத் தூண்டிய போதும் இப்போது வேண்டாம் என தள்ளிப் போட்டேன். ஆங்கில நூல்கள் பிரிவில் நீண்ட காலமாகத் தேடின பாஷோவின் பயண நூல் வாங்கத் தூண்டிய போதும் வைத்து விட்டேன்.விலை ₹350 .நான் படிக்க விரும்பும் ஏராளமான நூல்கள் இருந்தன. விலை ₹ 499 599 799 1200 என இருந்தது. என் சக்திக்கு ஆகாது.ஏதும் வாங்காமல் திரும்பி விட்டேன்.ஒன்றரை மணி நேர விரயம்.புத்தக வாசிப்பு குறைந்து வரும் காலத்தின் பிரக்ஞையுடன் பேருந்துக்கு காத்திருந்தேன். ஹிக்கின்பாதம்ஸ் கடையில் முன்பிருந்த களை இல்லை.வாடிக்கையாளர் ஓரிருவர் தான் இருந்தனர். தொழிலில் தாக்குப்பிடிக்க முடியாமல் இது போன்ற கடைகள் மூடுவிழா காணும்.சில பல ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டடம் பழுதாகி மூத்திரம் அடிக்கும் இடமாக மாறிவிடும்.அல்லது வணிக வளாகமாக இடித்துக் கட்டப்படும். அப்படித்தான் எதிரில் உள்ள அலங்கார் திரையரங்கின் ஞாபகம் வந்தது. பல அருமையான இந்திப் படங்களை அலங்காரில் பார்த்து ரசித்திருக்கிறேன். பக்கத்தில் ஒரு டீ க்கடை இருக்கும். சமோசா டீ சாப்பிட்டு படம் பார்க்கப் போன நினைவுகள் மனதில் நிழலாடின.இப்போது அலங்கார் இருந்த இடம் அலுவலக வளாகமாகி விட்டது .அருகில் இருந்த டீக்கடை மறைந்து கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளன.பிளாட்பாரத்தில் இருந்த பழைய புத்தகக் கடைகளும் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. அண்ணாசாலையிலும் அதைச் சுற்றியும் இருந்த வெலிங்டன், பிளாசா,எல்பின்ஸ்டன்,கெயிட்டி,சித்ரா,பாரகன், ஜெயப்பிரதா, மிட்லண்ட் என பல திரையரங்குகள் இன்று இல்லை.நியு செஞ்சுரி புக் ஹவுஸ் இப்போது இல்லை.கீதா கபே வெளியே கிடைக்கும் ருசியான மலாய் லஸ்ஸி போன்ற எத்தனை சுவைகளையும் சந்தோஷங்களையும் இழந்து இந்த அண்ணாசாலை இப்படி வெறிச்சோடி காணப்படுகிறது .எல்லாவற்றையும் அழித்துக் கொண்டு எதை இந்த நகரத்தில் ஆக்கப் போகிறோம் என்று தெரியவில்லை .என் போன்ற எத்தனை பேருக்கு புத்தகம், சினிமா அவசியம்? செல்போனிலேயே வாழ்கிற ஒரு தலைமுறையை உருவாக்கி விட்டோம்.முன்பு தேவி வளாகம் சாந்தி கேசினோ என இரவுக் காட்சிகள் முடிந்து வெளியே வரும்போது சுடச் சுட டீயும் பன்பட்டர் ஜாமும் சாப்பிட்டு வரிசையாக நிற்கும் இரவு சேவை பேருந்துகளை நோக்கி மக்கள் செல்லும் போது அண்ணாசாலையில் ஒரு திருவிழா நடைபெறுவது போல இருக்கும். ஒரு பெருநகரம் தனது திருவிழாவை எங்கே தொலைத்து விட்டது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.அடடா அதில் நானும் என் இளமைக்காலமும் அல்லவா தொலைந்து விட்டோம்! இன்று வாசித்த புத்தகம் 14 Death the greatest fiction. Osho. மரணம் ஒரு கலை. வாழ்தலைப் போல இதையும் பழகுதல் வேண்டும் என்றார் சில்வியா பிளாத் என்ற பெண்கவி.அவர் இளம் வயதில் தற்கொலை செய்துக் கொண்டார். ஓஷோ மரணம் ஒரு புனைகதை என்கிறார். இது ஓஷோவின் ஆரம்ப கால தொகுப்பு நூல்களில் ஒன்று. பகவான் ரஜ்னீஷ் பெயரில் வந்தது. பல நூல்களில் ஆங்காங்கே மரணம் பற்றி ஓஷோ கூறியதை அவரது சீடர்கள் தொகுத்தனர். தன் தாத்தாவின் இறுதி கணங்களைப் பற்றி கூறுகையில் தனது கலக்கத்தைப் பார்த்து பாட்டி சொன்னாராம். கலங்காதே.. தாத்தா நீண்ட காலம் வாழ்ந்து விட்டார்.இதற்கு மேல் ஆசைப்பட முடியாது. போதும்...என்று கூறினார். தாத்தா இறக்கும் போது பாட்டி ஒரு பாடலையும் பாடியதாக கூறுகிறார் ஓஷோ.பிரிவுக்கு தனி அழகு உள்ளது. பிரிவு கவித்துவமானது.அதன் மொழியைப் பயில வேண்டும். அதன் ஆழம் வரை வாழ வேண்டும். அதன் பிறகு அதன் துன்பத்திலிருந்து ஒரு புதிய வகை ஆனந்தம் உருவாகும் என்று கூறுகிறார் ஓஷோ. வாழ்க்கையில் திடீரென மரணம் நுழைகையில் வாழ்க்கையே அர்த்தமிழந்து விடுகிறது. அது அர்த்தமற்றது என்ற உண்மையைத் தான் மரணம் உணர்த்துகிறது.உன் ஒருவனுக்கு மட்டும் அல்ல அந்த மரணம். உன்னுடன் தொடர்பில் இருந்த எல்லோருடைய மரணமும் அது என்று விளக்குகிறார் ஓஷோ.மரண பயம்தான் மிகப்பெரிய பயம் என்றும் உன் துணிவை முற்றிலும் அழிக்கும் என்றும் கூறுகிறார். தியானம் மூலம் மரண பயத்தை வெல்ல முடியும் என்றும் வாழ்க்கையை கணந்தோறும் வாழ்ந்து அனுபவிக்க தியானம் மூலமே சாத்தியம் என்றும் கூறுகிறார் ஓஷோ.கலவிக்கு முந்தைய காதல் லீலைகளை வாழ்க்கை என்றும் மரணம்தான் உச்சம் அதுதான் உடலுறவு என்றும் அவர் தெரிவிக்கிறார்.ஒருவர் சாகாமலேயே மரணத்தை உணர முடியும் என்றும் ஓஷோ கூறியுள்ளார். ஒரு மனிதன் உயிரை விடும் அந்த சில நொடிகள் முக்கியமாவை .கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் கதைதான். ----------- இன்று வாசித்த புத்தகம் 15 நடிகை ஸ்ரீ தேவியை நம்நாடு,பாபு போன்ற படங்களில் குழந்தை உருவில் பார்த்திருந்த போதும் 16 வயதினிலே என்ற பாரதிராஜா படத்தில் முதன் முறையாக பருவமங்கையாகப் பார்த்த போது தூக்கத்தில் ஸ்ரீ தேவியை கனவுகண்ட பல லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்.அந்த அழகு அந்த சிரிப்பு செந்தூரப் பூவே என்று வெண்ணிற ஆடையில் ஊஞ்சல் ஆடிய காட்சி மயக்கம் இன்று வரை தெளியவில்லை.தொடை தெரிய பாவாடை யை தூக்கி யும் மாராப்பை நழுவ விட்டும் டாக்டர் பலவந்தப்படுத்தும் காட்சியில் இடுப்பை காட்டி யும் ஸ்ரீ தேவி தெளித்த கிளாமர் மழையை முற்றும் துறந்ந பல நடிகைகளாலும் ஈடு செய்ய இயலவில்லை. அப்போதே தெரிந்து விட்டது இந்தப் பெண் பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார் என்று. நடுவயதில் திடீரென தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விடுவார் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. மரணம் கொடூரமாக ஒரு கனவை பல லட்சம் கண்களில் இருந்து பறித்துச் சென்றது.ஸ்ரீ தேவி பற்றி சத்யார்த் நாயக் எழுதிய பயோகிராஃபி புத்தகம் ஒன்று பல முறை வாங்கத் தூண்டி விலை அதிகம் என்பதால் வாங்கவில்லை.இன்று என்னால் வாங்க முடியும் விலைக்கு ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. நடிகை கஜோல் முன்னுரை எழுதியிருக்கிறார். இதன் பக்கங்களைப் புரட்ட ஒரு வண்ண தேவதையின் வசீகரமான திரைவாழ்க்கை கண்முன் காட்சிகளாக விரிகிறது.ஸ்ரீ தேவி நவரஸங்களையும் திரையில் வெளிப்படுத்திய நட்சத்திரம் என்கிறார் நூல் ஆசிரியர். அந்தக் கால சினிமா பத்திரிகைகளில் ஸ்ரீ தேவி பேசியவையும் அவரைப் பற்றி மற்றவர்கள் கூறியவையும் புத்தகம் முழுக்க பொங்கலில் கிடைக்கும் முந்திரி பருப்பைப் போல சிந்தி கிடக்கின்றன. இந்த சிறந்த புத்தகத்தில் இரண்டு குறைகள்.ஒன்று ஸ்ரீ தேவியின் படப் பட்டியல் இல்லை. பல அழகான படங்களும் இல்லை.இருக்கும் சில படங்கள் குட்டி ஸ்டாம்ப் சைசில் உள்ளன.நாலு வயதில் தொடங்கி ஐம்பத்து நான்கு வயதில் சாகும்வரை திரையுலக ரசிகர்களை தன் அழகால் வசீகரித்த தேவதையின் வண்ணமயமான படங்கள் எத்தனை எத்தனை ஆயிரம் இருக்கும் .இந்தப் புத்தகத்தில் கிடைக்கவில்லை.

புன்னகையுடன் பேசுகிறேன்

எல்லா மனிதர்களையும் ஒரே நேரத்தில் நேசிக்கவும் வெறுக்கவும் என்னால் எப்படி முடிகிறது என்று வியக்கிறேன். சில மனிதர்கள் அப்படி ஒன்றும் மோசமானவர்கள் இல்லை. மாறாக மிகவும் நல்லவர்கள். அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அவர்களிடமும் நான் ஏன் விலகிச் செல்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை. நான் என்னை மட்டுமே நேசிக்கிறேன் என்று கூட சொல்ல முடியவில்லை. ஏனெனில் நான் மிகவும் வெறுக்கிற மனிதனும் நானேதான்.உறவுகள்,நட்புகள்,காதல்கள் தந்த வலிகள் இன்னும் நெஞ்சில் வண்டுகளைப் போல குடைகின்றன. எல்லோரும் சரியான வர்களாக இருக்கிறார்கள் எனில் நான் மட்டும் எப்படி தவறானவனாக இருக்கிறேன்.? நான் என்னதான் இந்த வாழ்க்கை யிடம் கேட்டு விட்டேன்?அன்பும் அரவணைப்பும் உண்மையும் அத்தனை தூரத்தில் உள்ள எட்டாத கனிகளா? யாரிடத்தில் எனக்கு அன்பும் அரவணைப்பும் உண்மையான தோழமையும் கிடைக்கும்?நான் அதனை எத்தனை பேருக்கு வழங்கியிருக்கிறேன்... அவர்களின் பெயர் சொல்லி கொச்சைப்படுத்த மாட்டேன்.இந்த வாழ்க்கையில் நான் வாழ இயலாது போனாலும் பிள்ளை களுடன் பூரணமாக வாழும் ஒவ்வொரு குடும்பத்தையும் மனதார வாழ்த்துகிறேன்.என் கண்ணீரின் ரகசியங்களை மகிழ்ச்சியுடன் வாழும் யாரிடமும் ஒருபோதும் கூற மாட்டேன். அவர்களிடம் ஒரு புன்னகையுடன் தான் பேசிக் கொண்டிருப்பேன்.என் சோகம் என்னோடுதான்.

இன்று வாசித்த புத்தகம் 16-22

இன்று வாசித்த புத்தகம் 16 வாக்கு கவிதைகள் ரிஷி. தமிழ் அறிவுத்தளம் நன்கு அறிந்த பெயர் லதா ராமகிருஷ்ணன். ரிஷி என்ற பெயரில் கவிதைகள் , அனாமிகா என்ற பெயரில் கதைகளும் எழுதி வருகிறார். நிறைய மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். அவருடைய கவிதைகள் நுன்ணுணர்வு கொண்டவை. நிறைய பத்திரிகைகளில் அவரை வாசித்து நூல் வடிவிலும் சிலவற்றை வாசித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் கடற்கரை மணல் எங்கும் ஓடித் திரிந்து கிளிஞ்சல் சேகரிக்கும் குழந்தைக் குதூகலமும் காலத் துளிகள் நாளும் பேதுறும் வயோதிகக் கலக்கமுமாக கவிதை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். வலி நிவாரணி தரும் வலி ஒரு அழகான எழுத்து. இன்னொரு கவிதையில் வகைவகையாய் மிகை பிம்பம் தரித்து காகித வாள் சுற்றித் திரிகிறாள் நாளும் என்று எழுதிச் செல்கிறார். எனக்கு மட்டுமான கடல் இன்னொரு நல்ல கவிதை. எத்தனையோ கால்களுடன் என் கால்களையும் நனைத்து விட்டுப் போகிறது கடல். அதில் என்னை மட்டும் தொட்டுப் போன நீர்மணிகளைத் திரட்டியெடுத்து என் நினைவடுக்குகளில் பத்திரப்படுத்தி வைக்கும் வகையறியாது திகைத்து நிற்கிறேன் நான் மிகை ஆனந்தம் போலவே பெயரறியாத் துயரொன்றின் பெயரும் கடலாகவே... என்று கவிதையை முடிப்பது ரசிக்க வைக்கிறது. கடவுளின் பூமி என்ற இறுதிக் கவிதையில் பெண்ணிய கோபமும் தாய்மையின் கனிவும் கலந்து வருகிறது. பெண்டாளப்பட்ட பின் துண்டாடப்பட்ட பிறப்புறுப்புகள் பெண் கடவுளர்களை ஊனமாக்கின என்று எழுதிய ரிஷி கவிதையை இப்படி தொடர்கிறார் .ஆண்மையழித்தன பரப்ரும்மாக்களின் மரணித்து விட்ட கண்மணிகளில் இறுதிப் பதிவாய் மதம் பிடித்த பார்வைகளின் மூர்க்கம் தெருவோரம் அறுந்து கிடக்கும் கருப்பையிலிருந்து எட்டிப் பார்க்கிறது ஒரு குட்டிக் கடவுள் என்று முத்திரை பதிக்கிறார். ---------------- இன்று வாசிக்கும் புத்தகம் 17 Heroes of Olympus .The son of Neptune. Rick Riordan. பழைய புத்தகக் கடையில் அள்ளி வந்த புதையல்களில் இதுவும் ஒன்று. மிகை புனைவு கதைகள் சிறு வயதில் நம்மை ஈர்க்கின்றன. தெய்வங்கள், பிசாசுகள்,இறக்கை முளைத்த ராட்சசிகள் ....பறவைகள், விலங்குகள் என நமது கற்பனை வெளியை விரிவுபடுத்துபவை இத்தகைய மாயஜால கதைகள்.இவை படிக்க மிகவும் சுவாரஸ்யமான கதைகள்.கிரேக்க குட்டிக் கடவுள்களின் வீரதீர சாகஸம் என்றால் நான் விழுந்து தொழுது படிப்பேன்.அத்தனை சுகமான வாசிப்புகள் .இந்த புத்தகமும் அப்படித்தான்.கையில் எடுத்ததுமே விறு விறு என பல பக்கங்கள், பல அத்தியாயங்கள் போனதே தெரியவில்லை.மெதுசா என்ற அரக்கியைக் கொன்றதற்கு பழி தீர்க்க பெர்சி என்ற குட்டிக் கடவுளை இரண்டு அரக்கிகள் அவர்கள் மெதுசாவின் சகோதரிகள், நம் நாயகன் பெர்சியைத் துரத்தோ துரத்து என துரத்தி அழிக்க வருகின்றனர். கடலில் மூழ்கி உயிர் பிழைத்த பெர்சிக்கு பழைய நினைவுகள் யாவும் அழிந்து விட்டன...அவன் எப்போது மெதுசாவைக் கொன்றான்,ஏன் கொன்றான் என்று அவனுக்கு சுத்தமாக நினைவில்லை.அவனுக்கு தன் பெயர் பெர்சி என்பதும் தான் ஒரு டெமி காட் என்பதும் தெரியும் .அவனுக்கு தன்னையன்றி நினைவில் நிற்கும் ஒரேயொரு பெயர் அன்னாபெத்.யார் இவள்? அவனது உயிருக்கு உயிரான காதலியாக இருக்கும். சபிக்கப்பட்ட இந்த குட்டிக் கடவுள் பெர்சி யார் ...அவனும் ஹேசல்,ஃபிராங்க் ஆகிய இரண்டு குட்டிக் கடவுள்களையும் தேவர் குலத்தைக் காக்க அந்த சர்வ வல்லமைப் படைத்த தேவன் ஏன் அனுப்பி வைத்தான்?தேவர்களுக்கு என்ன ஆபத்து? அதனை இந்த மூன்று டெமி காட்ஸ் எப்படி தங்கள் சாகஸங்களால் சாதித்துக் காட்டினர்.. பெர்சி அன்னாபெத்தை சந்திக்க முடிந்ததா? இப்படி பல கேள்விகள் எழுப்பி படித்துக் கொண்டிருக்கிறேன்.முழுக் கதையையும் தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசையாக இருக்கிறது அல்லவா...அசுக்கு புசுக்கு நான் சொல்ல மாட்டேன். நானே படித்து நானே ரசித்து. ....எப்பவாவது கிராபிக்ஸ் கலக்கலுடன் பாகுபலி மாதிரி ஒரு பிரம்மாண்டமான சினிமாவாக எடுக்கலாம். யாராவது பத்து இருபது கோடி செலவு செய்ய தயார் என்றால் சொல்லுங்கள். கதையை தமிழ் ஏழுத்தாளர் ஒருவர் தன் பெயரில் சுட்டாச்சு சுட்டாச்சு... பெரிய டைரக்டரிடம் அதனை பல லட்சம் பணத்துக்கு வித்தாச்சு வித்தாச்சு என்று யாரோ அழுகிறார் போல இருக்கு. அடப் பாவமே....இத்தனை கற்பனை வறட்சியா.... ----- இன்று வாசித்த புத்தகம் 18 Khushwant singh on women,sex,love, and lust. குஷ்வந்த் சிங் ஒரு பத்தி எழுத்தாளர் .பிரபல ஆங்கில நாளிதழ்களிலும் வார மாத இதழ்களிலும் எண்ணியதெல்லாம் எழுதிக் குவித்தார்.அவை நூற்றுக்கு மேற்பட்ட புத்தகஙாகளாக தொகுக்கப்பட்டுள்ளன.பெண் உடல் பாலியல் இன்பம் சார்ந்த அவர் எழுத்துகள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.இந்தப் புத்தகம் அவரது 90வது வயதில் வெளிவந்தது. மும்பையில் அழகான மன நலம் பாதித்த ஒரு மெல்லிய வேட்டியை மட்டுமே ஆடையாக உடலை மறைத்து வாழ்ந்த அந்த பெண் ஒரு நாள் மழையில் தனது வேட்டியைக் களைந்து நிர்வாணமாக குளிப்பதை பார்க்கிறார். இன்னொரு அத்தியாயத்தில் ஸ்வீடனின் நிர்வாண கடற்கரையில் கண்ட காட்சிகள் குறித்து விவரிக்கிறார்.பேண்ட்டை கழற்ற தமக்கு தயக்கம் இல்லை என்றும் தலைப்பாகையை கழற்றி தனது நீண்ட கூந்தலை காட்டுவதற்கு சங்கடப்பட்டதாகக் கூறுகிறார். ஓஷோவின் தந்த்ரா டெக்னிக் பற்றிய பதிவில் கூட்டுக்குழு உடலுறவு முறைகள் பாலியல் இச்சைகளில் இருந்து விடுதலை தருமா என சந்தேகம் எழுப்புகிறார்.காமனைத் தொழுதால் ராமனை அடையலாம் என்ற ஓஷோவின் சித்தாந்தத்தை சிலாகித்து காமத்திலிருந்து கடவுள் படிக்கத்தக்க புத்தகம் என்று பரிந்துரை செய்கிறார்.புத்தகம் முழுவதும் ஷேக்ஸ்பியர் முதல் உருது கவிதைகள் வரை மேற்கோள்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு அத்தியாயம் ரயிலில் செல்லும் புதுமணத் தம்பதிகள் ஊர்போய் முதல் இரவை கொண்டாட பொறுமை இல்லாமல் ரயிலிலேயே முதலிரவைக் கொண்டாடிய காட்சியைக் கூறுகிறார்.அவர்களின் நிர்வாணக் கோலத்தை கண்டு திடீரென மின்விளக்கை எரிய விட்ட போது அவர்கள் பதறாமல் சாவதானமாக ஆடைகளை திருத்தி எழுந்ததை கூறுகிறார்.செக்ஸ் பற்றி மனம் திறந்து பேசுவதும் பாலியல் பிறழ்வுகள்,மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம் நுகர்தல் போன்றவை பாவங்கள் அல்ல என்று கூறுகிறார் குஷ்வந்த் சிங். -------------------- இன்று வாசித்த புத்தகம் 19 சி.மோகன் கட்டுரைகள். தமிழ் இலக்கிய உலகில் நீண்ட காலமாக இயங்கி வரும் நண்பர் சி.மோகன் புதிய பார்வை,தீராநதி போன்ற இதழ்களில் எழுதிய கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து இது தொடர்பாக அவரிடம் நேரிலும் பாராட்டி இருக்கிறேன். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளை மீண்டும் ஒரே மூச்சாக இரண்டரை மணி நேரத்தில் வாசித்து முடித்தேன்.மனதுக்குள் தஸ்தாயவஸ்கி, ஜி.நாகராஜன், சம்பத் ஆகிய மூன்று ஆளுமைகள் தான் மனம் முழுவதையும் ஆக்ரமித்துள்ளனர்.இதற்கு சி.மோகன் மேற்கோள் காட்டும் காஃப்காவின் வரிகள்தான் காரணம்.மகிழ்ச்சி தரும் எழுத்தை விடவும் துன்பத்தையும் வலியையும் தருகிற எழுத்தே பெரிது என்று காஃப்கா கூறுகிறார். "நம்மை விட அதிகமாக நாம் நேசிக்கும் ஒருவரின் மரணத்தைப் போலவோ தற்கொலையைப் போலவோ ஆழ்ந்த துயரம் விளைவிக்கக் கூடிய புத்தகங்களே நமக்குத் தேவை. நமக்குள் படிந்திருக்கும் உறைபனிப் பாறையைப் பனிக் கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும் "என்று கூறுகிறார் காஃப்கா. தஸ்தாயவஸ்கி குறித்து சில கட்டுரைகளை செம்மைமாக எழுதியிருக்கிறார் மோகன் .இந்தக் கட்டுரைகள் தஸ்தாயவஸ்கி எழுத்தை முதல் முறையாக வாசிக்க வரும் வாசகனை கைப்பிடித்து அந்த மாய உலகினுள் அழைத்துச் செல்லும்.தஸ்தாயவஸ்கியை படிக்கத் தொடங்கிய அந்த நாள் தன் முதல் காதலை விட முக்கியமானது என்று ஹென்றி மில்லர் கூறுகிறார். கடவுள் என்ற கைவிளக்கை ஏந்திய தஸ்தாயவஸ்கி சரணடைதல், துன்பங்களை ஏற்றல்,குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று ஆன்மசுத்தி அடைதல் ஆகியவற்றிலேயே மனித விமோசனம் தங்கியிருந்த தென கருதினார் என்று குறிப்பிடுகிறார் சி.மோகன். இதே போன்று ஜி.நாகராஜன் இறுதி நாளில் கூட இருந்த அனுபவத்தை சி.மோகன் பதிவு செய்துள்ளார்.ஜி.நாகராஜனின் அழுகிய உடல் மதுரையில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப் பட்டது என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் சி.மோகனின் பதிவு அப்படி ஒன்றும் ஜி.நாகராஜன் அனாதையாக சாகவில்லை என்று உறுதி செய்து ஒரு நிம்மதிப் பெருமூச்சை விடச் செய்கிறது. மிகவும் குளிராக இருக்கிறது.சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்தக் குளிர் தீரும் என்று ஜி.நாகராஜன் தம்மிடம் கூறியதைப் பதிவு செய்துள்ளார் சி.மோகன். மேலும் பல ஆளுமைகள் சி.மோகனின் எழுத்தால் நினைவுகளில் புத்துயிர் பெறுகின்றனர்.சுந்தர ராமசாமி, ஆதிமூலம்,ஆனந்த குமாரசாமி, நிமாய் கோஷ்,எம்.பி. சீனிவாசன்,கோபிகிருஷ்ணன் போன்றோரின் நினைவுகள் போற்றி பாதுகாக்க வேண்டியவை.சி.மோகனின் அத்தனை எழுத்துகளும் நான் வாசிக்க விரும்பும் எழுத நினைக்கும் எழுத்துகளாக இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை மட்டும் என்னால் உடன்பட முடியவில்லை. தமிழில் மிகச்சிறந்த நாவல்களே இல்லை என்று கூறுகிறார்.என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் எழுத முயற்சி செய்தேன். சுந்தர ராமசாமி எழுதி விட்டார். --------------------------- இன்று வாசித்த புத்தகம் 20 திரும்பிப் பார்க்கையில்... ஷாஜி. திரையிசை தொடர்பான கட்டுரைகள் மூலம் கவனம் பெற்றவர் ஷாஜி. டி.எம்.எஸ். பற்றி சிறப்பாக எழுதியவர் சீர்காழி கோவிந்தராஜன் குறித்து மட்டமாக எழுதினார் .பொதுவாக ஜெயமோகன்,ஷாஜி மாதிரி மலையாள மனம் படைத்தவர்களுக்கு தமிழக கலைஞர்கள் மீது ஒருவித கேவலமான எண்ணம் இருப்பதை அவதானித்திருக்கிறேன்.இக்கட்டுரை தொகுப்பில் பிரபஞ்சனை குறித்த கட்டுரையில் தன் மீது பிரபஞ்சன் ஏன் கோபம் கொண்டார் என புரியவில்லை என்கிறார் ஷாஜி. எனக்கு இதுதான் காரணம் என்று தோன்றியது. ஜெயமோகன், சாரு நிவேதிதா ஷாஜி போன்றவர்கள் தமிழ் மணிக்கொடி எழுத்தாளர்களை தயிர்வடை எழுத்து என்று கூறுவதற்கு வெட்கப்படவில்லை . தமிழில் இரண்டு நாவல்கள் தான் எழுதப்பட்டன என்று கூறத் தயங்கவில்லை. விஷ்ணுபுரத்தை தன் தோளில் சுமந்து உயர்த்திப் பிடித்த பிரபஞ்சனைத் தூக்கி எறிய சிறிதுகூட நாணவில்லை.புதுமைப்பித்தன் மீது மூத்திரம் அடிப்பதும் பிறகு அவரை உயர்த்திப் பிடிப்பதும் தமிழ்ச் சூழலில் தான் நிகழும். பிரபஞ்சன் மீது உண்மையான மதிப்பையும் பிரியத்தையும் எஸ்.ராமகிருஷ்ணனிடம் பார்த்தேன்.அவரது கடைசி காலங்களை சிரமமின்றி கழிக்க பத்து லட்சம் ரூபாய் நிதித் திரட்டி தந்தார்.அந்த விழாவில் உணவு இடைவேளையின் போது பிரபஞ்சன் என்னுடன் இருந்தார் .சார் தயவுசெய்து இந்தப் பணத்தை பத்திரமாக வைத்து உங்கள் ஆடம்பரம் குறைத்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.அப்போது அவர் கண்கலங்கியது.ஆமாம் ஜெகதீஷ் எஸ்.ரா.எனக்கு மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது கையில் பணமில்லை. பிரபல மூத்த நடிகர் ஒருவர் 5லட்சம் ரூபாய் கொடுத்து உதவியதாக பிரபஞ்சன் கூறினார். இந்த புத்தகத்தில் இயக்குனர் மிஷ்கின் உதவியதாக ஷாஜி கூறுகிறார். மிஷ்கினும் உதவி இருக்கலாம். இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கட்டுரைகள் சில உள்ளன. ரித்விக் கட்டக் பற்றிய இரண்டு கட்டுரைகள் சிறப்பாக எழுத ப்பட்டுள்ளன.சத்யஜித் ரேக்கும் ரித்விக் கட்டக்குக்கும் கருத்து வேறுபாடு இருக்கவில்லை என்றும் ரே கட்டக்கின் ரசிகராக இருந்தார் என்றும் ஷாஜி கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொகுப்பில் பல அருமையான கவிதைகளையும் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார் ஷாஜி. அந்த கவிதைகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தக்கவை. -------------------- இன்று வாசித்த புத்தகம் 21 ஒத்திகைகள் பார்வையாளர்களுக்கல்ல...சூர்யராஜன் Suriya Rajan. இருசம்மா என்ற சிறுகதையை செந்தூரம் இதழில் எழுதிய நண்பர் சூர்யராஜன் இதயத்துக்கு நெருக்கமான நண்பர்.35 ஆண்டுகளைக் கடந்து இணக்கம் குறையாத நட்பு அது.எனது அறிவுத் திரியை சுடர விட்ட தீபமாகவே நான் அவரை மதிக்கிறேன். என் ஆசான் என்றுகூட சொல்வேன். இந்தப் புத்தகம் என்னிடம் உள்ள போதும் மூர்மார்க்கெட்டில் பார்த்து வாங்கி வந்தேன். மீண்டும் வாசித்த போது இப்போது எங்களுடன் இல்லாத இரண்டு நண்பர்களின் நினைவு கண்கலங்க வைத்தது.கல்யாணசுந்தரம் என்ற நண்பர் சூர்யாவின் எழுத்துகளுக்காகவே சிந்தனாலயா பதிப்பகம் ஆரம்பித்து வறுமையே வெளியேறு என்ற சூர்யாவின் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இந்த கட்டுரை தொகுப்பையும் அவரே 2007ம் ஆண்டு வெளியிட்டார். ஒரு நாவல் எழுதவும் ஆசைப்பட்ட கல்யாணசுந்தரம் வீட்டுக்கு நண்பர்களுடன் செல்லும் போது நாவலிஸ்ட் என்று நக்கலடிப் பார் கவிஞர் மு.நந்தா.நான் இழந்து தவிக்கும் இன்னொரு நல்ல நண்பர் நந்தா.அவர் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார். "கல்யாணசுந்தரத்தின் வீட்டையொட்டி ஒரு தோட்டம் இருந்தது. பேருக்குத்தான் அது தோட்டமே தவிர ஒரே ஒரு நாவல் மரம்தான் அங்கே இருந்தது. அதுதான் எங்கள் போதிமரம். " என்று நந்தா அழகாக பதிவு செய்து விட்டார். இத்தொகுப்பில் சினிமா என்றால் சத்யஜித் ரே,குருதத்,ஹிட்ச்காக் என்றும் இலக்கியம் என்றால் கு.ப.ரா., க.நா.சு.,பிரமிள்,அசோகமித்திரன் என்றும் தனிப்பட்ட அனுபவங்கள் என்றும் செறிவான கட்டுரைகளை சூர்யராஜன் எழுதியுள்ளார்.இதில் மகளும் ஒருநாள் தாயாவாள் என்ற கட்டுரை நெகிழ வைக்கும். "பெண் போகும் பொழுது கொண்டு செல்வது சீர்செனத்தி மட்டுமல்ல....பெண்ணைப் பெற்ற தாய்க்கு புகுந்த வீட்டில் தன் மகள் எதிர்கொள்ள வேண்டிய மனிதர்கள் சந்தர்ப்பங்கள் இவை சுமுகமாக அமைய வேண்டுமே என்கிற ஆதங்கம் ( அவள் சுகமாகவே இருப்பாள் ) அந்தத் தாய் ஒரு பாட்டம் அழுதுத் தீர்க்கிறாள்.அந்த அழுகையின் மூலம் தன் வேதனையைக் கரைக்க முயற்சிக்கிறாள் அந்தத் தாய்.அந்தத் தந்தையோ இவளுக்கு கணவன்,பெண்ணுக்குத் தகப்பன் என்கிற முறையில் மனைவியின் அழுகையை சமாதானப்படுத்துவதாக பாவனை செய்து தன் வேதனையைக் கரைக்க முயற்சிக்கிறான் " என்று எழுதியுள்ளார் சூர்யராஜன். தனது மூத்த மகளுக்கு மணம் முடித்த நிலையில் அவர் தனக்காகவும் பெண்ணைப் பெற்ற அத்தனை தாயுள்ளங்களுக்காகவும் எழுதிய வரிகளாகவே இதனை நான் வாசித்தேன். ---------------------- இன்று வாசித்த புத்தகம் 22 ரெஹம் கான் பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி ரெஹம் கான். இப்போது நாற்பது வயதைக் கடந்த சுதந்திரமான பெண்ணாக வெளிநாட்டில் வசிக்கிறார். லிபியாவில் முதல் திருமணம் இளம் வயதிலேயே நடந்து விட்டது. கணவர் அடித்துத் துன்புறுத்தியவர். 12 ஆண்டுகள் குடும்ப வனமுறையைப் பொறுத்துக் கொண்டு மூன்று குழந்தைகளுடன் வாழும் ரெஹம் கான் ஒரு நாள் தன் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் பொங்கி எழுகிறார். போலீசை அழைத்து கணவரிடமிருந்து விடுதலை பெறுகிறார். அழகுக் கலை நிபுணராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையை நடத்திச் சென்றவர் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானை இரண்டாம் கணவராக மணம் முடிக்கிறார். இம்ரான் கானின் அரசியலிலும் ஈடுபட்டு அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார். இந்த சுயசரிதையில் அவர் பல பொது விவகாரங்களைத் தான் விவாதித்து இருக்கிறார். பெண்களின் சுதந்திரம், நாட்டுப் பற்று போன்றவை இதில் உள்ளன. ஆனால் தனிப்பட்ட அந்தரங்க சம்பவங்கள் அதிகமாக இல்லை. அந்நிய ஆடவருடன் கைகுலுக்கவும் அனுமதி மறுக்கப்பட்ட குடும்பம், சமூகப் பின்னணி கொண்ட ரெஹம் கான் அரை சலாமுடன் தன்னிடம் கை நீட்டும் ஆடவர்களைத் தவிர்ப்பதைப் பதிவு செய்கிறார். 9 வயது சிறுமியாக இருந்த போது வயதான உறவினர் ஒருவர் லிப்டில் வைத்து உதட்டில் முத்தம் கொடுத்ததாக அதன் நினைவு இன்று வரை அருவருப்பு தருவதாக கூறுகிறார். ஆண்களைப் பற்றி கூறுகையில் தன் அன்பை அவர்களால் பெற முடியாத சூழல்களே அதிகம் என்றும் குறிப்பிடுகிறார். மூர் மார்க்கெட்டில் வாங்கி வந்த இந்த பெரிய புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து விட்டேன். அதற்கு காரணம் அழகான ரெஹம்கானின் முகமும் நெருடாத புத்தக ஆக்கமும்தான்.

Tuesday 20 October 2020

35 ஆண்டு இலக்கிய வாழ்வு -செந்தூரம் ஜெகதீஷ்

35 ஆண்டுகள் இலக்கிய வாசிப்பு ....வீடு வீடாக ,கூட்டம் கூட்டமாக சென்று சி.சு.செல்லப்பா,எம்.வி.வெங்கட்ராம்,வெங்கட் சுவாமிநாதன், அசோகமித்திரன்,கோவை ஞானி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, ஞானக்கூத்தன்,இன்குலாப்,தமிழன்பன்,மு.மேத்தா,நா.காமராசன்,வைரமுத்து,பொன்னீலன், பிரபஞ்சன் உள்பட நூற்றுக்கணக்கான ஆளுமைகளை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். என் பெயர் தெரியாத யாரும் இலக்கிய உலகில் இருக்க மாட்டார்கள். இருப்பினும் எல்லா பட்டியல்களிலும் என் பெயரை பெத்த பெருமாள்கள் யாரும் சொல்ல மாட்டார்கள். என் பெயரையோ என்னுடன் பல ஆண்டுகளாக பழகியதையோ மறப்பார்கள். அல்லது மறைப்பார்கள்.நான் நாள்தோறும் எழுதுவதை வாசிக்க எனக்கொரு வாசகப் பரப்பு விரிவடைந்து கொண்டு இருப்பது குறித்தும் கவனிக்க மாட்டார்கள். பட்டியலில் பெயர் இல்லை என்பதல்ல என் குறை. பட்டியலிடும் போது பெயர்கள் விடுபடுவது இயல்பு. நானும் தமிழின் முக்கிய கவிஞர்கள் என வாசிப்பு அனுபவத்தில் 200 பெயர்களைப் பட்டியலிட்ட போது குறைந்தது 50 பேரை விட்டு விட்டதை நிதர்சனமாக உணர்ந்தேன். ஆனால் என் இருப்பையே இல்லாமல் செய்கின்ற தமிழ்ச் சூழலின் கோர முகம்தான் எல்லோரிடமும் தெரிகிறது. எனது எழுத்துலக வாழ்வில் இரண்டு விருதுகளையும் என்னுடன் நூறுசதம் இணக்கம் கொண்ட ஆறேழு நண்பர்களையும் எந்த ஒரு நல்ல கருத்துக்கும் படைப்புக்கும் மனம் நிறைந்த வரவேற்பு கூறும் சில அபூர்வமான வாசக நண்பர்களையும் பெற்றுள்ளேன்.பொருள் இழப்பு காலம் இழப்பு என கணக்கிட்டால் வாழ்க்கையை வீணடித்து விட்டதாகத் தெரியலாம். ஆனால் இதைவிட ஓர் அர்த்தப் பூர்வமான வாழ்க்கையை வேறு எப்படி வாழ்ந்த போதும் நான் அடைந்திருக்க மாட்டேன்.கேத்தரீன் மான்ஸ்ஃபீல்ட் என்ற ஆங்கில எழுத்தாளர் கூறியது போல நாம் என்னவாக ஆகிறோம் என்பது முக்கியமல்ல. நாம் என்னவாக இருக்கிறோமோ அதுவே முக்கியம்.இன்றைய என் வாழ்க்கை ஏக்கங்களும் போதாமைகளும் நிரம்பியதாக இருந்த போதும் என் கவிதையில் கூறியது போல எனக்கான இருளில் மறைந்துள்ளது எனக்கான ஒளி.

இன்று வாசித்த புத்தகம் 1-6

இன்று வாசித்த புத்தகம் ரூமியின் மேற்கோள்கள்.. 1.நீ எங்கே இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும் முழுமையான அன்புடன் இரு. 2.உனக்குள் தோன்றும் வலிதான் இறைவனின் தூதுவராக உன்னிடம் வந்துள்ளது. 3.வானத்தைத் தொட்டுவிட ஒரேயொரு வழிதான் உள்ளது. அதை இதயத்தால் தொடுவது. 4 .உன்னை மிகச் சிறியவனாக எண்ணுவதை விட்டு விடு .உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சமே நீதான். 5.நீ கடலின் ஒரு துளியல்ல.கடலையே ஒரு துளிக்குள் வைத்திருப்பவன் நீ. 6.கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழுந்து விடு.எழுந்து வராதே ...அங்கேயே இரு. 7.இறுகப் பற்றுதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் இடையிலான சமநிலைக்குப் பெயரே வாழ்க்கை. 8 .உன் ஆன்மாவுக்குள் ஒலிக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் பதில் கொடு. 9.ஒரு விளக்காக இரு.உயிர்காக்கும் படகாக இரு.காயமடைந்த ஓர் உள்ளத்தை ஆற்றுப்படுத்து. 10.நிலவையே பார்த்து நின்ற போது நான் என் தொப்பியை இழந்து விட்டேன்.பின்னர் என் மனதும் கூட களவு போனது. தமிழாக்கம்.. செந்தூரம் ஜெகதீஷ். ----------------- 2 மனித மனம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள நேரத்திலும் அதன் ஒரு பகுதி கனவு காண்கிறது. கனவுகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டனர் . யாரும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. நனவிலி மனத்தின் உள்ளார்ந்த தூண்டுதல் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்றார் சிக்மண்ட் ஃபிராய்ட்.பச்சை நிற ஆடையணிந்த ஒரு பெண் மீது ஆசைப்பட்டு அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த மனிதன் பச்சை நிறம் மீது தீராத இச்சை கொள்கிறான். அவனது நிறைவேறாத விருப்பம் அவன் கனவுகளில் பிரதிபலிக்கும் என்றும் ஃபிராய்ட் கூறுகிறார்.ஒரு பழைய புத்தகக் கடையில் ₹ 20 க்கு இந்த புத்தகத்தை வாங்கி வந்தேன். இதை படிக்கிறேன் படிக்கிறேன் படித்து கொண்டே இருக்கிறேன். முழுவதும் படிப்பேனா என்று தெரியவில்லை.கனவுகளின் பலனை இப்புத்தகம் விளக்குகிறது.இந்த நூலுக்கு ஆசிரியர் இல்லை. லண்டன் பதிப்பகம் ஒன்று வெளியிட்டுள்ளது.கனவுகளின் பலன்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் உளவியல் அறிஞர்கள் மேற்கோள்களையும் இந்த புத்தகம் தரவில்லை ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தால்தான் படிக்க முடியும்.ஒவ்வொரு நாளும் உறக்கத்தில் வந்த கனவின் ஓர் இழையைப் பிடித்து அதன் பலனை சோதிக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்று திருப்பதி கோவிலுக்கு செல்வது போல ஒரு கனவு.பல மாதங்களாக கொரோனாவால் திருப்பதி செல்ல விரும்பி போக முடியவில்லை. அந்த நிறைவேறாத விருப்பம் என் கனவில் வந்தது. இதற்கு இப் புத்தகம் என்ன விளக்கம் தரும் என்பதை அறிய worshipper என்ற பத்தியைப் பார்த்தேன்.என் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிலரை சந்திப்பேன் என்று பலன் சொன்னது. யாராவது எனக்கு சொத்து எழுதி வைக்க விரும்பினாலோ நோபல் பரிசு கொடுக்க விரும்பினாலோ இதை நம்பலாம் . ஆனால் கனவில் விபத்தைக் கண்டால் என்ன பலன் என்று இப்புத்தகம் சொல்வதை ஏற்கலாம்.கனவில் விபத்தைக் கண்டால் அது ஒரு எச்சரிக்கை. 24 மணி நேரம் கார்,இருசக்கர வாகனம்,பேருந்து,ரயில், விமானப் பயணத்தை தவிர்க்க வேண்டும். சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனம் வேண்டும்.கத்தி பிளேடு போன்ற கூரிய ஆயுதங்களை கையாளக் கூடாது என்று கூறுகிறது இப்புத்தகம். இதனை பின்பற்றி வாழ்வது சரியாக இருக்கும் அல்லவா? --------------------------- 3 லியோ டாலஸ்டாயின் நீதிக் கதைகள்.தமிழாக்கம் முல்லை முத்தையா. போரும் அமைதியும்,புத்துயிர்ப்பு,அன்னா கரீனினா போன்ற பிரம்மாண்டமான நாவல்களை எழுதியவர் டாலஸ்டாய்.மகாத்மா காந்தி தனது அகிம்சை கொள்கையை டால்ஸ்டாய் மூலம் பெற்றதாக குறிப்பிட்டார். டால்ஸ்டாய் எழுத்துகளை தமிழில் கு.ப.ரா.உள்பட பலர் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.என்னிடம் சுமார் 30 தமிழாக்கங்கள் உள்ளன.அதில் ஒன்று முல்லை முத்தையா மொழிபெயர்த்த நீதிக் கதைகளின் தொகுப்பு. உழைப்பு,ஊக்கம், அன்பு, எளிமை,ஏழ்மை,தெய்வசிந்தனை,கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என்கிறார் முல்லை முத்தையா.எளிமையான தமிழ் நடையில் டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதைகள் வாசிக்க சுகம் அளிக்கின்றன. அவருடைய புகழ்பெற்ற கதையான ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும் என்ற கதை இத்தொகுப்பில் பேராசைக்காரன் என்ற பெயரில் உள்ளது.அதே போல கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கதை அழகானது.ஒரு பாரசீக துறவி தனது நாத்திக கருத்துகளால் மன்னரால் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் சூரத் நகருக்கு வருகிறார்.அவர் உதவிக்கு ஒரு கருப்பின அடிமையையும் அவர் அழைத்து வந்துள்ளார். அங்கு ஒரு டீ ஷாப்பில் பல்வேறு நாட்டவர் இருக்க அடிமை ஒரு சிறிய விக்ரகத்தை தன்னை எப்போதும் காக்கும் கடவுள் என்று கூற தர்க்கம் உருவாகிறது. ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு மதத்தவரும் தனது தெய்வம் தான் உயர்ந்தது என்று வாதாடுகின்றனர்.ராகு கேது குறித்தும் கூட ஒருவர் பேசுகிறார். நடுநிலையுடன் அனைவரின் வாதங்களையும் கேட்டு கப்பல் கேப்டன் ஒருவர் டால்ஸ்டாயின் குரலாக தனது கருத்தை முன் வைக்கிறார்." எல்லா மதங்களையும் இணைப்பதற்காக கடவுள் தாமே தோற்றுவித்த ஆலயம் இந்த உலகம் தான் .அதற்கு நிகரான ஆலயத்தை மனிதர்கள் கட்டிவிடவில்லை.கடவுளைப் பற்றி மனிதனுடைய கருத்து எவ்வளவு உயர்வாக உள்ளதோ அவ்வளவுக்கு அவரைப்பற்றி புரிந்து கொள்ள முடியும் என்றும் கப்பல் தலைவர் கூறுகிறார். தெளிவான சிந்தனை யுடன் கதையை முடிக்கிறார் டால்ஸ்டாய். ------------------------------------------------------------------ 4 நா.காமராசனின் சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள். எண்பதுகளில் சென்னை தேவநேய பாவாணர் நூலக அரங்கில் அப்துல் ரகுமான் தலைமையில் நான் கவிதை வாசித்த போது என் கவிதையில் பெரிய உருது கவிஞர்களின் தாக்கம் இருப்பதாக கூறிய அப்துல் ரகுமான் நா.காமராசன் போல ஜெகதீஷ் வளர்வார் என்று கூறினார். அதுவரை நா.காமராசனை பெரிய கவிஞர் என்று எண்ணியதில்லை.முதல் சந்திப்பிலேயே என்னை நா.காமராசனுடன் ஒப்பிட்டு விட்டாரே என்று கருப்பு மலர்களை மீண்டும் படித்தேன்.ஆனால் அது என்னை கவரவில்லை. சரி கவிக்கோ சும்மா ஒரு புகழ்ச்சிக்கு சொன்னது என்று எண்ணி மறந்து விட்டேன்.நா.காமராசன் கவியரசு பட்டம் போட்டுக் கொண்டார். கண்ணதாசனை விட தான் பெரிய கவிஞர் என்று பேட்டி கொடுத்தார்.இதே போல வைரமுத்துவும் கவியரசு பட்டத்துக்கு ஆசைப்பட்டு கடும் எதிர்ப்பு எழுந்ததால் கலைஞர் அவருக்கு கவிப்பேரரசு பட்டம் கொடுத்ததும் தனிக் கதை.நல்ல வேளை கண்ணதாசன் தப்பினார். என்னைப் பொருத்தவரை கவியரசு என்றால் அது கண்ணதாசன் மட்டும்தான். நா.காமராசனின் இந்த புத்தகம் நூலகத்தில் கிடைத்தது.பல ஆண்டுகள் கழித்து படிக்கும் போது நா.காமராசன் எழுத்தில் ஒரு ஆழமான தேடலும் எளிமையான தத்துவமும் இருப்பதை உணர முடிகிறது.இதைத்தான் அன்று கவிக்கோ குறிப்பிட்டார் போலும்.இது ஒரு வசன கவிதை புத்தகம். நட்பு,தாய்,புரட்சி, காதல் ,குழந்தைகள் என்று நா.காமராசன் வடித்த சொற் சித்திரங்கள் இதில் உள்ளன.மகாபலிபுரம் பற்றி எழுதிய வரிகள் படித்து ரசிக்கத் தக்கவை.கவிஞர்களின் நூல் நிலையமே கடற்கரை என்கிறார். பன்னீர் மலர்கள் உதிர்வதை வெவ்வேறு காலங்களில் வேறு வேறு அர்த்தத்தில் காண்கிறார். நட்பை கூறுகையில் யாரோ ஒருவன் தனிமைத் தீவுக்குப் போகும் போது ஷேக்ஸ்பியர் எழுதிய காவியங்களை எடுத்துச் செல்ல விரும்பினானாம்.எனக்கு மட்டும் அப்படி ஒரு தனிமை பாக்கியம் கிடைக்கும் என்றால் வேதனைகளெல்லாம் கரைகிறவரை அழுவதற்குத் தேவைப்படுகிற கண்ணீரை என் கண்களில் எடுத்துச் செல்வேன் என்று கூறுகிறார் நா.கா .மனிதனை அதிகமாக அழ வைப்பது காதல் என்றால் அந்த கண்ணீரைத் துடைப்பது நட்பின் கரங்கள் அல்லவா... ஆனால் நம்மை நமது நண்பர்கள் கூட சில நேரங்களில் அழச் செய்து விடுகிறார்கள். அதனால்தான் எப்போதாவது யாருடைய உள்ளத்தையாவது நான் புண்படுத்தியிருந்தால் அருள்கூர்ந்து மன்னித்து விடுங்கள் என்று விடைபெறுகிறான் கவிஞன். ----------------------------- 5 இயக்குனர் சேத்தன் ஆனந்த் நடிகர் தேவ் ஆனந்தின் அண்ணன். கைடு படத்தை இயக்கும் போது தேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகினார். இதனால் அந்தப் படத்தை கடைசி தம்பியான விஜய் ஆனந்த் இயக்கினார். சேத்தன் இயக்கிய 18 படங்களும் முக்கியமானவை. இந்த புத்தகத்தில் தமது திரைப்பட அனுபவங்களை வழங்கியுள்ளார்.போட்டோ ஆல்பம் போல ஏராளமான கருப்பு வெள்ளை மற்றும் கலர் படங்கள் கொண்ட இந்த புத்தகத்தை நேற்று மூர்மார்க்கெட்டில் வாங்கி வந்து கீழே வைக்க மனமில்லாமல் படித்தேன்.சேத்தன் ஆனந்த் இயக்கிய ஹஸ்தே ஜக்கம் ( புன்னகைக்கும் காயங்கள் ) டாக்சி டிரைவர், ஹக்கீகத் ( யதார்த்தம்) ஹீர் ராஞ்சா போன்ற படங்கள் நினைவுத் திரையில் ஓட இந்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டியது சிலிர்க்க வைத்த அனுபவம். முகமது ரஃபி ,லதா மங்கேஷ்வர் போன்ற அற்புதமான பாடகர்கள் பாடிய மிகச்சிறந்த சில படங்கள் சேத்தன் படங்களில் இடம் பெற்றன.ஹீர் ராஞ்சா வில் ரஃபி பாடிய யே துனியா என்ற பாடல் 12 நிமிடங்கள் ஓடக்கூடிய பாடல்.காதலில் தோல்வி யடைந்த ஒரு மனிதன் ஆன்மீகத்தை நாடி புனித யாத்திரை செல்வதாக இப்பாடல் பல புண்ணிய தலங்களிலும் பாலைவனத்திலும் படமாக்கப்பட்டது.ஆண்டவன் கட்டளை படத்தில் சிவாஜி கணேசன் நடித்த ஆறு மனமே ஆறு என்ற பாடலும் அப்படிப்பட்டதுதான். இதே போல ஹஸ்தே ஜக்கம் படத்தில் லதா மங்கேஷ்வர் பாடிய பேதாப் தில்கீ தமன்னா என்ற பாடல் ஆழம் மிக்கது.இரண்டு பாடல்களையும் கேட்டு விட்டு சேத்தன் ஆனந்துக்கு ஒரு சல்யூட் வைப்போம். ------------------- 6 வ.ரா.வை ஒரு தலைமுறையே அறியாமல் இருப்பது துரதிர்ஷ்ட்டம். தமிழ் உரைநடை முன்னோடி அவர் .புனைவு அல்லாத எழுத்தை சுவையாக எழுதினார். அவரது சொர்க்கத்தில் சம்பாஷனை ஒரு கற்பனை சித்திரம்.சொர்க்கத்தில் பச்சையப்பரும் பட்டினத்தாரும் சந்தித்து பேசுகிறார்கள்.பெண்களை பேய் என்று கூறிய பட்டினத்தாரைக் கண்டிக்கிறார் பச்சையப்பர். தன்மயக்கத் தால் (ஈகோவால்) ஏற்படும் யுத்தங்கள், ஆண் பெரியவன் என்ற பைத்தியக்காரத்தனங்களை விவாதிக்கிறார்கள்.கண்ணகியும் ஆண்டாளும் சந்தித்து பேசும்போது தமிழின் சிறப்பை சிலாகிக்கிறார்கள்.மீண்டும் தமிழ்நாட்டில் பிறக்க ஆசைப்படுகிறார்கள்.பாரதியும் கம்பனும் அம்பிகாபதியை அருகில் வைத்து காதலின் பெருமை பேசுகிறார்கள்.தெனாலிராமன்/காளமேகம், இளங்கோ/சாத்தனார், மாதவி /தமயந்தி என பல்வேறு உரையாடல்கள் வ.ரா.வின் தெளிந்த நீரோட்டம் போன்ற எழுத்து நடையால் மனம் கவர்கின்றன. வ.ரா.வின் நூல்கள் அனைத்தும் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் கிடைக்கும்.

Saturday 17 October 2020

மனப்பிறழ்வு நேரங்கள்

மனப் பிறழ்வு நேரங்கள் வாய்க்கும் போது ஒரு இசை அல்லது ஒரு ஆழமான புத்தகம் அல்லது மனம் விரும்பும் ஒரு தோழமை இருப்பது நலம். வாழ்க்கை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு. இதனை துயரில்லாமல் கடந்து விட வேண்டும். யாருமறியா தனிமையில் மரணம் எங்கே அழைத்துச் செல்லும் என்று யாரும் அறியார்.யாக்கைத் திரியின் கடைசி சுடரை பொத்தி காக்கின்றேன்.அழகும் இளமையும் இயக்கமும் இருக்கும் வரை என் பின்னால் சிலர் இருப்பார்.அவர்களில் ஒரு ஆறுதலை தேடிக் கொள்ளவும் வேண்டும். இதுவரை வாழ்ந்ததற்கான கண்ணீருடன் சில புன்னகைகளை என்னுடன் நான் எடுத்துச் செல்ல வேண்டும்.

இன்று வாசித்த புத்தகம் 1-2

1இன்று வாசித்த புத்தகம் ரூமியின் மேற்கோள்கள்.. 1.நீ எங்கே இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும் முழுமையான அன்புடன் இரு. 2.உனக்குள் தோன்றும் வலிதான் இறைவனின் தூதுவராக உன்னிடம் வந்துள்ளது. 3.வானத்தைத் தொட்டுவிட ஒரேயொரு வழிதான் உள்ளது. அதை இதயத்தால் தொடுவது. 4 .உன்னை மிகச் சிறியவனாக எண்ணுவதை விட்டு விடு .உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சமே நீதான். 5.நீ கடலின் ஒரு துளியல்ல.கடலையே ஒரு துளிக்குள் வைத்திருப்பவன் நீ. 6.கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழுந்து விடு.எழுந்து வராதே ...அங்கேயே இரு. 7.இறுகப் பற்றுதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் இடையிலான சமநிலைக்குப் பெயரே வாழ்க்கை. 8 .உன் ஆன்மாவுக்குள் ஒலிக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் பதில் கொடு. 9.ஒரு விளக்காக இரு.உயிர்காக்கும் படகாக இரு.காயமடைந்த ஓர் உள்ளத்தை ஆற்றுப்படுத்து. 10.நிலவையே பார்த்து நின்ற போது நான் என் தொப்பியை இழந்து விட்டேன்.பின்னர் என் மனதும் கூட களவு போனது. தமிழாக்கம்.. செந்தூரம் ஜெகதீஷ். ------------------------------------ 2 மனித மனம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள நேரத்திலும் அதன் ஒரு பகுதி கனவு காண்கிறது. கனவுகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டனர் . யாரும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. நனவிலி மனத்தின் உள்ளார்ந்த தூண்டுதல் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்றார் சிக்மண்ட் ஃபிராய்ட்.பச்சை நிற ஆடையணிந்த ஒரு பெண் மீது ஆசைப்பட்டு அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த மனிதன் பச்சை நிறம் மீது தீராத இச்சை கொள்கிறான். அவனது நிறைவேறாத விருப்பம் அவன் கனவுகளில் பிரதிபலிக்கும் என்றும் ஃபிராய்ட் கூறுகிறார்.ஒரு பழைய புத்தகக் கடையில் ₹ 20 க்கு இந்த புத்தகத்தை வாங்கி வந்தேன். இதை படிக்கிறேன் படிக்கிறேன் படித்து கொண்டே இருக்கிறேன். முழுவதும் படிப்பேனா என்று தெரியவில்லை.கனவுகளின் பலனை இப்புத்தகம் விளக்குகிறது.இந்த நூலுக்கு ஆசிரியர் இல்லை. லண்டன் பதிப்பகம் ஒன்று வெளியிட்டுள்ளது.கனவுகளின் பலன்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் உளவியல் அறிஞர்கள் மேற்கோள்களையும் இந்த புத்தகம் தரவில்லை ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தால்தான் படிக்க முடியும்.ஒவ்வொரு நாளும் உறக்கத்தில் வந்த கனவின் ஓர் இழையைப் பிடித்து அதன் பலனை சோதிக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்று திருப்பதி கோவிலுக்கு செல்வது போல ஒரு கனவு.பல மாதங்களாக கொரோனாவால் திருப்பதி செல்ல விரும்பி போக முடியவில்லை. அந்த நிறைவேறாத விருப்பம் என் கனவில் வந்தது. இதற்கு இப் புத்தகம் என்ன விளக்கம் தரும் என்பதை அறிய worshipper என்ற பத்தியைப் பார்த்தேன்.என் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிலரை சந்திப்பேன் என்று பலன் சொன்னது. யாராவது எனக்கு சொத்து எழுதி வைக்க விரும்பினாலோ நோபல் பரிசு கொடுக்க விரும்பினாலோ இதை நம்பலாம் . ஆனால் கனவில் விபத்தைக் கண்டால் என்ன பலன் என்று இப்புத்தகம் சொல்வதை ஏற்கலாம்.கனவில் விபத்தைக் கண்டால் அது ஒரு எச்சரிக்கை. 24 மணி நேரம் கார்,இருசக்கர வாகனம்,பேருந்து,ரயில், விமானப் பயணத்தை தவிர்க்க வேண்டும். சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனம் வேண்டும்.கத்தி பிளேடு போன்ற கூரிய ஆயுதங்களை கையாளக் கூடாது என்று கூறுகிறது இப்புத்தகம். இதனை பின்பற்றி வாழ்வது சரியாக இருக்கும் அல்லவா?

Thursday 15 October 2020

எஸ்.பி.பியும் ரஜினிகாந்த்தும்

ஆயிரம் நிலவே வா 16 எஸ்.பி.பி.யும் ரஜினிகாந்த்தும் ரஜினிகாந்த் கதாநாயகனாக முதல் முறை பெயர் பெற்ற படம் புவனா ஒரு கேள்விக்குறி. இதில் ரஜினிக்கு மிகச்சிறந்த ஒருபாடலை இளையராஜா இசையமைக்க பஞ்சு அருணாசலம் எழுதிய ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள என்ற பாடல் படமாக்கப்பட்டது. அது ரஜினியின் முதல் அரசியல் பாடலாகவும் இப்போது தெரிகிறது. பல்லவி அப்படி...இதனைப் பாடியவர்கள் எஸ்.பி.பியும் எஸ்.ஜானகியும்.அதே படத்தில் விழியிலே மலர்ந்தது பெண் என்னும் பொன் அழகு என்று இன்னொரு பாடலையும் எஸ்.பி.பி ரஜினிக்குப் பாடினார். சதுரங்கம் படத்தில் ரஜினி்க்கு ஜோடியாக பிரமீளா நடித்திருந்தார். இந்தப் படத்தில் மதனோற்சவம் ரதியோடுதான் பாடலை எஸ்.பி.பி வாணி ஜெயராமுடன் ரஜினிக்குப் பாடினார். வாலி இயற்றிய பாடலுக்கு இசையமைத்தவர் வி.குமார். வணக்கத்துக்குரிய காதலியே ஸ்ரீதேவிக்கும் ரஜினிகாந்த்துக்கும் முதல் கெமிஸ்ட்ரி உருவாக்கிய படம். இளமை ததும்பும் ஸ்ரீதேவியை ரஜினி தூக்கிக் கொண்டு ( மினி ஸ்கர்ட்டில் ) ஆடிப்பாடினார். இதில் ரஜினிக்கு அறிமுகப்பாடல் hey i am the king of kings என்று தொடங்கி கொட்டு கொட்டு மேளம் கொட்டு என்ற பாடலுக்கு எஸ்.பி.பி. குரல் கொடுத்தார். பாடல் கண்ணதாசன். இசை எம்.எஸ்.வி. மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படத்தில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை பாடலை கங்கை அமரன் எழுத இளையராஜா இசையமைத்தார். காளி என்ற ரஜினியின் கதாபாத்திரத்தை வடிவமைத்த முக்கியப் பாடல் இது.இதனை எஸ்.பி.பி தன் இனிமையான குரலால் அழகு செய்தார். கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான தப்புத் தாளங்கள் படத்திலும் கண்ணதாசன் எழுதிய இரண்டு பாடல்களை எஸ்.பி.பி. விஜயபாஸ்கர் இசையில் ரஜினிக்காகப் பாடினார். தப்புத்தாளங்கள் வழி தவறிய பாதங்கள் என்றும் என்னடா பொல்லாத வாழ்க்கை என்றும் பாடல்கள் பிரபலமாயின. என் கேள்விக்கென்ன பதில், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் போன்ற படங்களிலும் எஸ்.பி.பியின் பாடல்கள் இடம்பெற்றன. ஆறில் இருந்து அறுபது வரை படத்தில் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ பாடலை எஸ்பிபி லயித்துப் பாடினார். இளையராஜா இசையமைத்த பஞ்சு அருணாசலத்தின் பாடல் அது. பில்லாவில் மெல்லிசை மன்னர் இசையில் கண்ணதாசன் எழுதிய இரண்டு பாடல்களும் ரஜினியின் வளர்ச்சிக்கு கை கொடுத்தன. மை நேம் இஸ் பில்லா என உச்சஸ்தாயியில் பாடிய எஸ்.பி.பி நாட்டுக்குள்ள எனக்கொரு பேரிருக்கு என்ற பாடலையும் ரஜினிக்குப் பாடினார். அன்புக்கு நான் அடிமை படத்தில் இளையராஜா இசையில் காத்தோடு பூ உரச பாடலையும் காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம் என்ற கதைப் பாடலையும் வாலி எழுத எஸ்.பி.பி பாடினார். காளி படத்தில் இளையராஜா இசையில் கண்ணதாசன் எழுதிய வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்துப் பார்ப்போம் வாடா நைனா பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதே போல் பொல்லாதவன் படத்தில் எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசனின் நானே என்றும் ராஜாவும் நான் பொல்லாதவன் பாடலும் ரசிகர்களால் விரும்பி வரவேற்கப்பட்டது. அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானாம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா என்று வாணி ஜெயராமுடன் பாடிய டூயட் பாடல் பேரின்பம். ஜானி படத்தில் கங்கை அமரன் எழுதிய செனோரிட்டா ஐ லவ் யூ பாடலையும் இளையராஜா இசையில் பாடினார் எஸ்.பி.பி. கழுகு படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய ஒரு பூவனத்துல பாடலும் பிரபலமானது. தில்லு முல்லு படத்தில் ராகங்கள் பதினாறு பாடலையும் தில்லுமுல்லு என்ற தலைப்புப் பாடலையும் கவிஞர் கண்ணதாசன் எழுத எம்.எஸ்.வி இசையி்ல் பாடினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ராணுவ வீரன் படத்தில் வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் என்ற பாடலை ரஜினிக்காகப் பாடினார் எஸ்.பி.பி. புலமைப்பித்தன் எழுதிய இப்பாடல் தீவிரவாதத்திற்கு எதிரானது. MSV இசையமைச்ச இப்படத்தில் சொன்னால்தானே தெரியும் என்று இன்னொரு இனிய பாடல் உள்ளது. தனிக்காட்டு ராஜாவிலும் எஸ்.பி.பி, பாடிய கூவுங்கள் சேவல்களே பாடல் சிறப்பானது. வாலி எழுதி இளையராஜா இசையமைத்த சந்தனக் காற்றே என்ற இன்னொரு டூயட் பாடலு்ம் கேட்க கேட்க இனிமையானது. போக்கிரி ராஜாவில் விடிய விடிய சொல்லித் தருவேன் பாடலும் இனிமையாக இருந்தது. கண்ணதாசன் எழுத எம்.எஸ்.வி இசையமைத்தார். மூன்று முகம் படத்தில் நான் செய்த குறும்பு பாடல் சங்கர் கணேஷ் இசையில் வாலி எழுதியது. இதே படத்தில் தேவாமிர்தம் பெண்தான் என்ற வைரமுத்துவின் பாடலும் ஹிட்டானது. துடிக்கும் கரங்கள் படத்தில் எஸ்.பி.பி இசையமைத்து நான்கைந்து பாடல்களைப் பாடினார். இதில் தன இசையில் தானே பாடிய அடடா இதுதான், மேகம் முந்தானை போன்ற பாடல்கள் சிறப்பானவை. புலவர் புலமைப்பித்தன் , கங்கை அமரன் பாடல்களை எழுதினர். டிஎம்எஸ் எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் பொருத்தமாக தனது குரலை மாற்றியமைத்தது போலவே கமலுக்கும் ரஜினிக்கும் எஸ்.பி.பி தமது குரலை மாற்றிக் காட்டினார். ரஜினிக்கு மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ், மனோ , டிஎம்எஸ் உள்பட பல பாடகர்கள் குரல் கொடுத்த போதும் எஸ்.பி.பியின் குரல் அவருக்கு தனி ஆளுமையை உருவாக்கித் தந்தது. நினைத்தாலே இனிக்கும் படத்தில் நம்ம ஊர் சிங்காரி என்று ரஜினிக்கு பாடிய பாடல் உற்சாகமானது. எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலுடன் தட்டிக் கேட்க ஆளில்லைன்னா தம்பிச்சண்டைப் பிரசண்டன் பாட்டையும் நிழல் கண்டவன் நாளும் இங்கே பாடலையும் எஸ்.பி.பி. பாடினார். இந்தப் படத்தில் மற்ற மற்ற எல்லாப் பாடல்களும் கமலுக்குப் பாடினார். இதில் எம்.எஸ்.வியும் ரஜினிக்கு குரல் கொடுத்து சிவசம்போ என்ற பாட்டை வெளுத்து வாங்கினார். கைகொடுக்கும் கை என்ற மகேந்திரன் இயக்கிய படத்தில் தாழம்பூவே வாசம் வீசு என்ற பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுத இளையராஜா இசையமைத்தார். நல்லவனுக்கு நல்லவன் படத்தில் முத்தாடுதே முத்தாடுதே மோகம் என்ற பாடலை எஸ்.பி.பி பாடினார். வாலி எழுதிய நம்ம முதலாளி என்றொரு பாடலையும் இப்படத்தில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடினார். நான் சிவப்பு மனிதன் படத்தில் வைரமுத்து எழுதிய வீரியமான பாடல் காந்தி தேசமே காவல் இல்லையா...இதில் உச்சஸ்தாயியில் எஸ்.பி.பி ரஜினிக்காக பாடினார். இசை இளையராஜா.இந்தப் படத்தில் வெண்மேகம் மண்ணில் வந்து என்ற புலமைப்பித்தனின் பாடலையும் பொன்மானே சங்கீதம் பாட வா என்ற முமேத்தாவின் பாடலையும் எஸ்.பி.பி பாடியுள்ளார். பாலு மகேந்திரா ரஜினியை வைத்து இயக்கிய படம் உன் கண்ணில் நீர் வழிந்தால் இந்தப்படத்தில் ரஜினியின் உதடுகளில் வெள்ளைத் தழும்புகள் காணப்பட்டன. குழப்பமான திரைக்கதை. ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த பாத்திரம் என்று படம் தோல்வியைத் தழுவியது. ஆனாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய கண்ணில் என்ன கார்காலம் என்ற பாடல் இனிமையானது.பாடல் வைரமுத்து. படிக்காதவன் படத்தில் வாலி எழுதிய ராஜாவுக்கு ராஜா நானே, வைரமுத்து எழுதிய ஜோடிக்கிளியெங்கே சொல்லு சொல்லு போன்ற பாடல்களை இளையராஜா இசையில் பாடினார் எஸ்.பி பாலசுப்பிரமணியம். மிஸ்டர் பாரத்தில் காத்திருக்கேன் கதவைத் திறடி என்ற பாடலையும் என்னம்மா கண்ணு என்ற பாடலையும் எஸ்.பி.பி பாடினார்.இசை இளையராஜா. விடுதலை இந்தியில் வந்த குர்பானி படத்தின் ரீமேக் படமாகும். இந்தப் படத்தில் விஷ்ணுவரதன், சிவாஜி கணேசனுடன் ரஜினி நடித்திருந்தார். மூவருக்கும் எஸ்பிபியின் குரலில் பாடல்கள் இருந்தன. சந்திரபோஸ் இசையில் புலமைப்பித்தன் எழுதிய ராஜாவே ராஜா என்ற பாடலும் வாலி எழுதிய நீலக்குயில்கள் இரண்டு, தங்கமணி ரங்கமணி வாம்மா ஆகிய பாடல்களும் இடம் பெற்றன. ரங்கா படத்தில் சங்கர் கணேஷ் இசையில் பட்டுக்கோட்டை அம்மாளு என்ற வாலியின் பாடலையும் எஸ்.பி.பி பாடினார். தாய் வீடு இந்தி இசையமைப்பாளர் பப்பி லகரியின் மெட்டுகளைத் தழுவி சங்கர் கணேஷ் இசையமைத்த படம். இதில் வாலி எழுதிய உன்னை அழைத்தது பெண், அழகிய கொடியே ஆடடி போன்ற பாடல்களை பாடினார். நான் அடிமை இல்லை என்ற படமும் இந்தி ரீமேக் தான். இந்தப் படத்தில் ரஜினிக்கு இசையமைத்தவர் கன்னட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த். ஒரு ஜீவன்தான் உன்பாடல்தான் என்ற பாடலும் வா வா இதயமே என் ஆகாயமே என்ற பாடலும் இனிமையானவை. பாடல்களை வாலி எழுதினார். கே.பாலசந்தர் இயக்கிய வேலைக்காரன் படத்தில் மு மேத்தா எழுதி இளையராஜா இசையமைத்த தோட்டத்திலே பாத்தி கட்டி பாடலை எஸ்.பி.பி பாடினார். சிங்காரமாம் ஊரு இது சென்னையின்னு பேரு ஊரைச் சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு....வரிகள் பட்டித் தொட்டியெல்லாம் ஒலித்தன. ஊர்க்காவலன் படத்தில் சங்கர் கணேஷ் இசையில் சித்ராவுடன் பாடிய பாடல் மாசி மாசம்தான் கெட்டி மேள தாளம்தான் பாடலை வைரமுத்து எழுதினார். மனிதன் படத்தில் சந்திரபோஸ் இசையிலும் வைரமுத்து எழுதிய வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் பாடல் உருக்கமானது. குரு சிஷ்யன் படத்தில் கண்டு பிடிச்சேன் கண்டுபிடிச்சேன் என்று ரஜினிக்கும் பிரபுவுக்கும் மாறி மாறிப் பாடினார் எஸ்.பி.பி. அழகான பாடல் இது. வாலி எழுத இளையராஜா இசை. வா வா வஞ்சி இளமானே என்று சித்ராவுடன் பாடிய டூயட்டும் பேசப்பட்டது.இதில் பிரபு சீதா நடித்தனர். சிவப்புச்சூரியன் படத்தில் மிஸ்டர் மிராண்டா என்ற வாலியின் பாடல் இடம் பெற்றது.இசை எம்.எஸ்.வி. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் பூவே பூவே வா என்ற பாடல் ஹிட் .ஆனால் அது ரஜினிக்குப் படமாக்கப்படவில்லை. இளையராஜா இசையில் வாலி எழுதியது. அடுத்த வாரிசு படத்தில் இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதிய காவிரியை கவி்க்குயிலே கண்மணியே வாவா பாடலும் பேசக்கூடாது என்ற பாடலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். தங்கமகன் படத்தில் இளையராஜா இசையி்ல் புலமைப்பித்தன் எழுதிய ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பாடல் சுகமானது. அடுக்கு மல்லிகை ஆள் புடிக்குது என்ற நா.காமராசன் பாடலும் வாவா பக்கம் வா என்ற முத்துலிங்கம் பாடலும் பூமாலையே தோள் சேரவா என்ற வாலியின் பாடலும் சக்கைப் போடு போட்ட பாடல்களாகும். ஆயிரம் நிலவே வா 18 எஸ்.பி.பி.யும் ரஜினியும் தொடர்ச்சி 3 ரஜினிக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரல் மிகச்சிறப்பாகப் பொருந்தியது. சில நேரங்களில் கமலை விடவும் கூடுதலாக. காதலின் தீபம் ஒன்று பாடல் அதில் ஒன்று. தம்பி்க்கு எந்த ஊரு படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையமைத்த பாடல் இது. இதே போல் தர்மத்தின் தலைவன் படத்தில் தென்மதுரை வைகை நதி பாடலை சொல்லலாம். இந்தப் பாடலில் ரஜினியின் நடை உடை பாவனையுடன் எஸ்.பி.பியின் குரல் இளையராஜா இசையில் தாலாட்டியது. பாடல் வாலி. தர்மதுரை படத்தில் ஆணென்ன பெண்ணன்ன என்ற பாடலை கங்கை அமரன் எழுதினார். சந்தைக்கு வந்த கிளியை பஞ்சு அருணாசலம் எழுதினார். இசை இளையராஜா. கொடி பறக்குது படத்தில் சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு,அன்னை மடியில் கண்திறந்தோம், ஓ காதல் என்னை காதலிக்கவில்லை என்ற பாடல்கள் இடம் பெற்றன. ஹம்சலேகா இசையமைக்க வைரமுத்து எழுதினார். பாரதி ராஜா 16 வயதினிலேவுக்குப் பிறகு ரஜினியை வைத்து இயக்கிய படம் இது. நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று ஒரு படம். கன்னட நடிகர், இயக்குனர் வி.ரவிச்சந்திரன் இயக்கிய படம். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே சிறப்பானவை. இசையமைத்தவர் ஹம்சலேகா. ரஜினிக்கு ஜூகி சாவ்லாவும் ரவிச்சந்திரனுக்கு குஷ்பூவும் ஜோடியாக நடித்தனர். குஷ்பூ இதில் முத்தக்காட்சியிலும் நீச்சல் உடையிலும் கவர்ந்தார். இந்தப் படத்தின் தொடக்க டைட்டில் பாடல்காட்சி தொடங்கி எஸ்.பி.பி பாடல்கள் வர்ண ஜாலமாடின. சின்னக் கண்ணம்மா, என் தாயின் மணிக்கொடியே ,நல்லவன் நல்லவன் நாட்டுக்கொரு நல்லவன் பாடல்களை வைரமுத்து எழுதினார். ஒன் டூ த்ரீ பாடலை எழுதிய முத்துலிங்கம் வீடு கட்டி விளையாடலாமா என்ற பால்ய கால காதலை சித்தரிக்கும் ஒரு சிறப்பான பாடலை எழுதியிருக்கிறார். அதை எஸ்.பி.பி.யும் ஜானகியும் பிரமாதமாகப் பாடியிருப்பார்கள். தளபதி இளையராஜா இசையில் உச்சததைத் தொட்ட படம் . இதில் காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கொன்னும் பஞ்சமில்லை என்ற பாடலை எஸ்.பி.பி. ஜேசுதாசுடன் இணைந்து பாடினார். வாலி எழுதிய இப்பாடல் எஸ்.பி.பி. ஜேசுதாஸ் நட்பையும் ரஜினி-மம்முட்டி நட்பையும் ஒரே நேரத்தில் சிறப்பாகவே பதிவு செய்துள்ளது. மன்னன் படத்தில் ரஜினிக்கு இளையராஜா இசையில் ராஜாதி ராஜா , சண்டி ராணியே. அடிக்குது குளிரு, கும்தலக்கடி கும்தலக்கடி கும்மா ஆகிய பாடல்களை வாலி எழதினார். அண்ணா மலை ரஜினியின் மகத்தான வெற்றிப்படங்களில் ஒன்று. இதில் தேவா இசையில் வைரமுத்து எழுதிய வந்தேன்டா பால்காரன் , அண்ணாமலை அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ ஆகிய பாடல்களுடன் வெற்றி நிச்சயம் என்ற பாடலை எஸ்.பி.பி. சிறப்பாகப் பாடி மகிழ வைத்தார். எஜமான் படத்தில் ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் எனக்கு எப்போதும் பிடித்த பாடல். வாலி எழுதி இளையராஜா இசையமைத்த இப்பாடல் எப்போது ஒலித்தாலும் என் உலகம் இயக்கமின்றி அப்பாடலில் மூழ்கி விடுகிறது. நிலவே முகம் காட்டு, அடி ராக்குமுத்து ராக்கு ,ஆலைப்போல வேலைப் போல போன்ற பாடல்களையும் வாலி எழுதினார். உழைப்பாளி படத்திலும் ரஜினிக்கு உழைப்பாளியும் நானே ஒரு கோலக்கிளி வந்தது வந்தது மானே போன்ற பாடல்களைப் பாடினார்.அம்மா அம்மா எனதாருயிரே என்ற பாடல் நெஞ்சை உருக்கும் வகையில் இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதினார். வீரா படத்திலும் இளையாராஜா இசையில் கொஞ்சி கொஞ்சி மலர்கள் ஆட பாடலை பஞ்சு அருணாசலமும், மாடத்திலே என்ற பாடலை வாலியும் எழுத எஸ்.பி.பி பாடினார். முத்து படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுத எஸ்.பி.பி ஒருவன் ஒருவன் முதலாளி, கொக்கு சைவ கொக்கு பாடல்களைப் பாடினார். அதே போல் அருணாசலம் படத்திலும் அதான்டா இதான்டா, மாத்தாடு மாத்தாடு, தலைமகனே என வைரமுத்து, பழனிபாரதி, காளிதாசன் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். பாட்ஷா படத்தில் மீண்டும் தேவா இசையில் வைரமுத்து எழுதிய நான் ஆட்டோக்காரன், நீ நடந்தால் நடை அழகு, ஸ்டைலு ஸ்டைலுதான், ரா ரா ராமையா, பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ஆகிய பாடல்களை ஹிட்டாக்கினார் எஸ்.பி.பி. சந்திரமுகி படத்தில் வாலி எழுதிய தேவுடா தேவுடா பாடலையும் பா விஜய் எழுதிய அத்திந்தோம் என்ற பாடலையும் பாடினார் எஸ்.பி.பி. இசையமைத்தவர் வித்யாசாகர். பாபா , சிவாஜி எந்திரன் படங்களிலும் ரஜினிக்கு எஸ்.பி.பி பாடினார். பேட்ட படத்தில் ராமன் ஆண்டாலும் ரீமிக்ஸ் பாடலையும் தர்பார் படத்தில் சும்மா கிழி என்ற விவேக்கின் பாடலையும் ரஜினிக்கு பாடினார் எஸ்.பி.பி. வரவிருக்கும் அண்ணாத்தே படத்திலும் ரஜினிக்குப் பாடியிருக்கிறார் (

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...